ரேஷன் கடைகளின் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் தர வேண்டும்! தென்னை விவசாயிகள் அரசுக்கு யோசனை!
கோவை: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மலேசியா, இந்தோனேஷியா வியாபாரிகள் பலன் பெறுவதற்காக தமிழக மக்களின் வரிப்பணத்தில் ரூ.200 கோடி செலவு செய்து பாமாயில் இறக்குமதி செய்வது நியாயமா எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
இதனிடையே இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் புதன்கிழமை கோவை மாவட்டம் செஞ்சேரிமலையில் தென்னை உழவர்கள் கோரிக்கை மாநாடும் நடைபெறவுள்ளது.
ஒரே ரயில்.. ஸ்ட்ரைட்டா காசி - தமிழ்நாடு போகலாம்.. பேர்லதான் ட்விஸ்ட்! அடேங்கப்பா.. ரூ.7,000 கோடியா?
கொப்பரை தேங்காய்
கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரியும், தென்னை விவசாயிகளின் இன்னும் பல கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையிலும் தென்னை உழவர்கள் கோரிக்கை மாநாடு நடத்தப்படவுள்ளது. இதனிடையே அந்த மாநாட்டுக்கு முன்னதாகவே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் விடுத்துள்ள வேண்டுகோளில், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என அரசுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளுக்கு தடை
இதேபோல் உலக அளவிலும் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் கள்ளுக்கு தடை இல்லை என்றும் தமிழகத்தில் மட்டும் ஏன் தடை போடப்பட்டுள்ளது எனவும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக அரசு 12 சாரா ஆலை அதிபர்களுக்காக இந்த தடையை போட்டிருக்கிறதா என வினவியுள்ள அந்த அமைப்பு கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
அனுமதி கொடுக்கவும்
கள்ளுக்கான தடையை நீக்கும் விவகாரத்தில் அரசு எந்த காலதாமதமும் செய்யாமல் கேரளாவை போல் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி கொடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இதேபோல் கிசான் ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசுக்கு முன் வைக்கப்பட்டுள்ளது. கொப்பரை தேங்காய் விலையை பொறுத்தவரை மத்திய அரசு கொடுக்கும் விலை கட்டுப்படியாகவில்லை எனத் தெரிவித்துள்ளது.
பனைப் பொருட்கள்
தமிழக நியாய விலைக்கடைகளில் பனைப்பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தென்னை விவசாயிகள் முன் வைத்துள்ள இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்பது தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் எதிர்பார்ப்பு ஆகும்.