ஆகஸ்ட் 6ல் கோவை மாநகராட்சி மேயர் தேர்தல்.. ஆகஸ்ட் 5ல் நெல்லை மேயர் தேர்தல்.. ஏற்பாடுகள் தீவிரம்!
கோவை: கோவை, நெல்லை மாநகராட்சிகளின் மேயர் தேர்தலை நடத்தும் தேதிகள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 5 ஆம் தேதி நெல்லை மாநகராட்சி மேயர் தோ்தல் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 6 ஆம் தேதி கோவை மாநகராட்சி மேயர் தோ்தல் நடைபெற உள்ளது.
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் மற்றும் திமுகவின் முதல் மேயர் ஆகிய சிறப்புகளுடன் பதவியேற்ற கல்பனா ஆனந்தகுமார் இரண்டே ஆண்டுகளில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல, நெல்லை மாநகராட்சி மேயராகப் பொறுப்பில் இருந்த சரவணனும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கோவை மேயர் கல்பனா: கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 96 வார்டுகளை கைப்பற்றின. அப்போது கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி 19 வது வார்டு உறுப்பினர் கல்பனா ஆனந்தகுமாரை மேயராக பரிந்துரை செய்ததன் பேரில் திமுக தலைமை அவரை மேயர் வேட்பாளராக அறிவித்தது. அதைத் தொடர்ந்து கல்பனா ஆனந்தகுமார் மேயராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
மேயர் கல்பனா, திமுக மாமன்ற உறுப்பினர்களிடையே மோதல் போக்கை கடைப்பிடித்து வந்ததாலும், கோவை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டல தலைவர்களுடனும் மோதல் போக்கை கடைபிடித்து வந்ததாலும் அவர் மீது திமுக தலைமைக்கு அடுத்தடுத்து புகார்கள் சென்றன. தலைமைக்கு தொடர்ச்சியாக புகார்கள் சென்றதைத் தொடர்ந்து அவரை மாற்ற தலைமை முடிவு செய்தது. இந்நிலையில் தான் திமுக தலைமையின் அறிவுறுத்தலை தொடர்ந்து, தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார் கல்பனா.
நெல்லை மேயர் சரவணன்: கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமாரின் ராஜினாமாவை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணனும் ராஜினாமா செய்தார். நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 51 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். நெல்லை மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன் இருந்தார். கவுன்சிலர்களில் ஒரு தரப்பினர் மேயர் சரவணனுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் செயல்பட்டு வந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக கவுன்சிலர்கள் 38 பேர் மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆணையரிடம் மனு அளித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் தங்கம் தென்னரசு சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இந்த மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வந்தார். எனினும் அதிருப்திகள் அடங்கியபாடில்லை.
நெல்லை, கோவை மேயர்கள் மீது தலைமைக்கு வந்த தொடர் புகார்களின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு விசாரணை நடத்தினார். அமைச்சரின் விசாரணையை தொடர்ந்து கட்சி் மேலிட அறிவுறுத்தலின்படி மேயர்கள் இருவரும் ராஜினாமா செய்தனர்.
அடுத்தடுத்து ராஜினாமா: தமிழ்நாட்டில் பல மாதங்களாகவே சர்ச்சைகளில் சிக்கி வந்த 2 மேயர்களும் ஒரே நாளில் அடுத்தடுத்து ராஜினாமா செய்தது திமுக வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியது. காலியாக உள்ள திருநெல்வேலி மற்றும் கோவை மாநகராட்சி மேயர் பதவியிடங்களை நிரப்ப மறைமுக தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சிகளின் கூட்டங்களை நடத்தி மேயர்களை தேர்ந்தெடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
ஆகஸ்ட் 6: இந்த நிலையில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 6 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து திமுக தலைமை ஒரு வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்கும். தேர்தல் நாளில் மாமன்ற உறுப்பினர்கள் மேயரை தேர்வு செய்வார்கள். திமுக பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால், திமுக வேட்பாளர் போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 5: அதேபோல, அன்று நெல்லை மேயருக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் காலியாக உள்ள மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனுவை வரும் ஜூலை 29ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 10 மணி வரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம், ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 11 மணி வரை தாக்கல் செய்யலாம், பரிசீலனை 11 மணிக்கு நடைபெறும், 11.30 முதல் 11.45 வரை மனுவை வாபஸ் பெறலாம். மேயர் பதவிக்கு போட்டி இருப்பின் பிற்பகல் 12.30 முதல் 2 மணி வரை தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications