விஜய்யின் வருகையால் ஸ்தம்பித்த அவிநாசி சாலை.. மக்கள் மாற்றுப் பாதையை பயன்படுத்த போலீஸ் அறிவுறுத்தல்
கோவை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில், வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேர்தலை சந்திப்பது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. விஜயின் கோவை வருகையால் அவிநாசி சாலையில் காலை முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மாலை வரை கருத்தரங்கம் நடைபெறவுள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருக்கும் என்பதால் பொதுமக்கள் மாற்று வழியைப் பயன்படுத்த போலீஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி கருத்தரங்கு கோவை மாவட்டம், குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. மாலை 3 முதல் 6 மணி வரை நடைபெறும் இந்த கருத்தரங்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் பத்து மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும், நாளை 13 மாவட்டங்களைச் சேரந்த வாக்குச்சாவடி முகவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இந்த கருத்தரங்கில் வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கான களப் பணிகள் மேற்கொள்வது குறித்தும், ஆட்சி மாற்றத்துக்கான செயல்பாடுகள் குறித்தும் விரிவாகப் பேசவுள்ளதாக அக்கட்சி வட்டாரம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கருத்தரங்கில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த விஜய்க்கு, விமான நிலைய வளாகத்தில் ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பை அளித்தனர். உற்சாகத்தில் தொண்டர்கள் தவெக கட்சிக் கொடியை விஜயை நோக்கி வீசத் தொடங்கினர். அந்த கட்சிக்கொடிகளை அன்போடு பெற்று தனது கழுத்தில் அணிந்து கொண்டு, அவர்களை நோக்கி கையசைத்தார் விஜய். திறந்த வேனில் ஏறி நின்று, தொண்டர்களின் வரவேற்பை விஜய் ஏற்றுக் கொண்டார்.
பின்னர், அவர் அவிநாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் நட்சத்திர விடுதியில் தங்குவதற்காக கார் மூலம் புறப்பட்டார். இதனால், அவிநாசி சாலை முழுவதும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வார இறுதி நாட்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், வழக்கத்தைவிட அதிக அளவில் பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பூத் கமிட்டி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கோவை வந்தடைந்த விஜய் வருகையால் அவிநாசி சாலையில் காலை முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். விஜயின் வருகையைக் காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் அவிநாசி சாலையில் கூடியதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது.
ஒரு சில ரசிகர்கள் விஜயின் வாகனத்தில் ஏற முயன்றதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நெரிசல் காரணமாக, வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். விஜயின் பூத் கமிட்டி மாநாடு மாலை வரை நடைபெற உள்ள நிலையில், அவிநாசி சாலையில் இன்று முழுவதும் போக்குவரத்து நெரிசல் தொடர வாய்ப்புள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வார விடுமுறை என்பதால் பொதுவாகவே அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே காணப்படும். தற்போது விஜயை காண்பதற்காக அதிகளவிலான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கூடியுள்ளதால் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க அவிநாசி சாலையைப் பயன்படுத்தாமல், மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications