கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு- தந்தை பெரியார் தி.க.வினர் 3 பேருக்கு 7 ஆண்டு சிறை!
கோவை: கோவையில் பாஜக அலுவலகம் மீது 2018-ல் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் தந்தை பெரியார் தி.க.வினர் 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
2018-ம் ஆண்டு திரிபுராவில் இடதுசாரிகளிடம் இருந்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது. இதனை முன்வைத்து தமிழ்நாட்டிலும் தந்தை பெரியார் சிலையை அகற்றுவோம் என மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா கூறியிருந்தார். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. எச்.ராஜாவின் கருத்தை தொடர்ந்து திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையும் சேதப்படுத்தப்பட்டது.

தந்தை பெரியார் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ந் தேதி கோவையில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக கோவை ராமகிருட்டிணனை பொதுச்செயலாளராகக் கொண்ட தந்தை பெரியார் தி.க.வைச் சேர்ந்த கோபால், ஜீவா, கவுதம் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது. ஆனால் குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வைத்து சிறையில் இருந்து 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இவ்வழக்கு கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. 5 ஆண்டுகளுக்குப் பின் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கோபால், ஜீவா, கவுதம் மூவருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ1,000 அபராதம் விதித்து நீதிபதி சசிரேகா தீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து 3 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக தந்தை பெரியார் தி.க. அறிவித்துள்ளது. இது தொடர்பாக தந்தை பெரியார் தி.க. ட்விட்டர் பக்கத்தில், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான பணிகளை நமது, கழக துணைத் தலைவர், மூத்த வழக்கறிஞர் ஐயா துரைசாமி, மற்றும் தலைமை நிலைய செயலாளர் இளங்கோவன் மற்றும் வழக்கறிஞரணி தோழர்கள் துவங்கிவிட்டனர். கூடிய விரைவில் இந்த பொய் வழக்கை உடைத்து தோழர்களை வெளியே கொண்டு வரப்படுவார்கள் என்பதையும் தோழர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர்கள் பாலு,தோழர் ஜீவானந்தம்,தோழர் கெளதம் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பட்டதை அடுத்து கோவை நீதிமன்றத்தில் இருந்து கோவை மத்திய சிறைக்கு அழைத்து சொல்லப்பட்டுள்ளனர்* pic.twitter.com/bJ9in28iqu
— கோவை இராமகிருட்டிணன் (@kuratpdk) June 12, 2023












Click it and Unblock the Notifications