அசுர வேகத்தில் வந்த தனியார் பேருந்து.. அதிர்ச்சியான முதியவர். உக்கடத்தில் பரபரப்பு
கோவை: கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில், பயணிகள் நிற்கும் இடத்தில் ஒரு பேருந்து தனியார் பேருந்து அசுர வேகத்தில் இயக்கப்பட்டது. முதியவர் ஒருவர் மீது மோதும் வகையில் ஆபத்தான முறையில் பேருந்து இயக்கினார்கள். இதுகுறித்து கேள்வி எழுப்பிய முதியவரை, தனியார் பேருந்து ஓட்டுநர் தரக்குறைவாகப் பேசி மிரட்டினார். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் தினசரி ஏராளமான பேருந்துகள் வந்து செல்லும். பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி மற்றும் கேரளா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளுக்கு அங்கிருந்து தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்லும். கோவை மாநகருக்குள் இயங்கும் நகரப் பேருந்துகளும் அங்கு வந்து செல்லும்.

கோவை முதியவர்
பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் பகுதியில் ஒரு முதியவர் ஓரமாக பேருந்திற்காக காத்திருந்துள்ளார். அங்கு வந்த பொள்ளாச்சி - மேட்டுப்பாளையம் வழித்தட தனியார் பேருந்து வேகமாக முதியவரை உரசும் வகையில் சென்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக முதியவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். அதைப் பார்த்த மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
"ஏன் இவ்வளவு வேகமாக வருகிறீர்கள் ?" என்று அந்த முதியவர் ஓட்டுநரை பார்த்து கேட்டுள்ளார். அதற்கு அந்த ஓட்டுநர் "நீ ஓரமாகப் போய் நிற்க வேண்டியது தானே என்று" ஒருமையில் பேசியுள்ளார். அதனுடன் முதியவரை மிகத் தரக்குறைவான வார்த்தைகளால் சாடியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பேருந்து அலட்சியம்
இதுகுறித்து உக்கடம் பகுதி மக்கள் கூறுகையில், "கோவையில் இயங்கும் பல தனியார் பேருந்துகள், குறித்த நேரத்திற்குள் அடுத்த பேருந்தை முந்த வேண்டும் என்ற 'வசூல்' மற்றும் 'லாப' நோக்கத்தில் அசுர வேகத்தில் இயக்கப்படுகின்றன. பேருந்து நிலையத்திற்குள் நுழையும் போதும், வெளியேறும் போதும் பாதசாரிகள் குறித்து எந்தக் கவலையுமின்றி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கேள்வி எழுப்பும் பயணிகளை மிரட்டுவதும், தரக்குறைவாக நடத்துவதும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் இடையே ஒரு பழக்கமாகவே மாறி வருகிறது. ஏற்கனவே கோவையில் தனியார் பேருந்துகள் மோதி பல உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ள நிலையில், போக்குவரத்துத் துறையும் காவல்துறையும் இத்தகைய அராஜக ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை
பேருந்து நிலையத்திற்குள் வேகக் கட்டுப்பாட்டை மீறும் ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். பயணிகளிடம் கண்ணியக்குறைவாக நடக்கும் பணியாளர்கள் மீது கடும் அபராதம் விதிக்க வேண்டும். அசுர வேகத்தில் இயங்கும் பேருந்துகளைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியரை தரக்குறைவாக பேசிய ஓட்டுநர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.














Click it and Unblock the Notifications