கோவை கார் வெடிப்பு.. என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு..சூத்திரதாரி யார் உண்மை வெளிவருமா?
கோவை: கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கோவையில் அக்டோபர் 23ஆம் தேதியன்று கார் வெடித்த நிலையில் என்ஐஏ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவையில் கடந்த 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோட்டை மேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது. இதில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.

கோவையில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேர் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை அடுத்த மாதம் 8ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றைய தினம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜமேசா முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தேசிய புலனாய்வு முகமை டிஐஜி வந்தனா மற்றும் எஸ்பி ஸ்ரீஜித் ஆகியோர் கோவையில் முகாமிட்டுள்ளனர்.
இதனிடையே கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்குப் பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியானது. கார் வெடிப்பின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட மத்திய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது
தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று கோவை கார் வெடிப்பு வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ஐஏ விசாரணையின் முடிவில் கார் வெடிப்பிற்கான உண்மையான காரணம் என்ன? சதி வேலைக்கான சூத்திரதாரி யார் என்ற தகவல் வெளியே வரும். கோவை மாநகரத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications