கோவை பாரூக் கொலை வழக்கு.. ஆறு பேருக்கு வழங்கிய ஜாமீன் ரத்து.. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
கோவை: கோவையில் திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி பாரூக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் ஆறு பேருக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆறு பேரையும் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி விஜயா உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிர்வாகியாக செயல்பட்டு வந்தவர் பாரூக். பாரூக் இறை மறுப்புக் கொள்கை குறித்து தொடர்ந்து பேசி வந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றபோது, சாட்சி கூறுவதற்காக நேருதாஸ் என்பவர் வந்துள்ளார். அப்போது, நீதிமன்றத்தில் குற்றவாளிகள் ஆறு பேரும் நேருதாஸுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த வழக்கில் சாட்சி கூறினால் பாரூக்கை கொலை செய்ததைப் போல உன்னையும் கொன்று விடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளனர்.
குற்றவாளிகள் கொலை மிரட்டல் விடுப்பதாக நேருதாஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின்பேரில், குற்றவாளிகள் அகரம் ஜிந்தா, ஜாபர் அலி, அப்துல் முனால், சதாம் உசேன், சம்சுதீன், அன்சாத் ஆகிய ஆறு பேர் மீது மீண்டும் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், அரசு தரப்பு வழக்கறிஞர் செல்வராஜ் இந்த ஆறு பேருக்கும் வழங்கப்பட்டிருந்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இந்த கோரிக்கையை ஏற்ற கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி விஜயா ஆறு பேருக்கும் வழங்கப்பட்டிருந்த ஜாமீனை ரத்து செய்து, ஆறு பேரையும் மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். தீவிரவாத தடுப்பு காவல் துறையினர் இரு குழுக்களாகப் பிரிந்து கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரையும் தேடி வருகின்றனர். ஆறு பேரும் தலைமுறைவாகி இருக்கக்கூடிய நிலையில் தனிப்படை போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications