பாலக்காடு ரயில் வழித்தடம்.. கோவை மதுக்கரையில் நடக்கும் அதிரடி மாற்றம்.. சபாஷ் வனத்துறை
கோவை: கோவை மதுக்கரை அருகே ரயில் தண்டவாளப் பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் வருகின்றன. இதனை தடுக்க தண்டவாளத்தின் ஓரத்தில் 3½ கி.மீட்டர் தூரம் இரும்பு தடுப்புகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கோவையின் புறநகர் பகுதியான மதுக்ரை கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை இணைக்கும் வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதி வழியாகவே கேரளா-தமிழ்நாடு இடையே பிரதான ரயில் தண்டவாளம் அமைந்துள்ளது .

மதுக்கரை அருகே எட்டிமடை பகுதியில் ரயில் தண்டவாளங்கள் உயரமாக இருப்பதால் வனப்பகுதியில் ரயில் தண்டவாளங்களில் ஏறிச் சென்று யானைகள் கடக்கின்றன. அப்படி யானைகள் அடிக்கடி ரயில் தண்டவாளங்களை கடக்கும் போது சில நேரங்களில் ரயில் தண்டவாளங்களில் சிக்கி யானைகள் உயிரிழப்பது நடக்கிறது.
இதனிடையே மதுக்கரை எட்டிமடை பகுதியில் யானைகள் அடிப்பட்டு இறப்பதை தடுக்க புதிய திட்டம் தயாரிக்கப்பட்டது. இதன்படி மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் தண்டவாளத்தின் கீழ்ப்பகுதியில் யானைகள் எளிதாக கடக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக தற்போது காட்டு யானைகள் மிகவும் எளிதாக கடந்து சென்றும் வருகின்றன.
இந்த திட்டம் வெற்றியடைந்ததால், மற்றொரு சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் அந்தப்பகுதியில் 12-க்கும் மேற்பட்ட நவீன கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டு காட்டு யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுக்கரையில் இருந்து எட்டிமடை வரை காட்டு யானைகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியே வந்து விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்து செல்வது நடக்கிறது.
அதற்கு யானைகள் தண்டவாள பகுதியை கடந்துதான் வரவேண்டிய நிலை உள்ளது. எனவே யானைகள் தண்டவாளத்தை கடந்து வருவதை நிரந்தரமாக தடுக்க வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், மதுக்கரை ரயில் நிலையம் அருகே உள்ள குடோன் பகுதியில் இருந்து எட்டிமடை அருகே வரை 3½ கி.மீ. தூரத்துக்கு காட்டு யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதை தடுக்க இந்த 3½ கி.மீ. தூரத்துக்கும் தண்டவாளத்தை ஒட்டி பழைய தண்டவாள இரும்பு கம்பிகள் மூலம் தடுப்பு அமைக்கப்படுகிறது. இதற்கான ஆய்வு பணி நடந்து வருகிறது.
ஏற்கனவே மதுக்கரை பகுதியில் வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் ஒரு கி.மீ. தூரத்துக்கு இதுபோன்ற இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இதற்கு எவ்வளவு செலவாகும் என்பது தொடர்பாக ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். இதற்கு தமிழக அரசின் அனுமதி உத்தரவு வந்து, நிதி ஒதுக்கப்பட்டதும் ரயில்வே மூலம் தண்டவாளத்தின் ஓரத்தில் இரும்பு கம்பிகள் அமைக்கப்படும்" இவ்வாறு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications