கோவையில் தங்க, வெள்ளி மாஸ்க்... அசத்திய பொற்கொல்லர்...குவியும் ஆர்டர்கள்!!
கோயம்புத்தூர்: கோயம்புத்தூரைச் சேர்ந்த தங்க நகை பொற்கொல்லர் ஒருவர் தங்கத்தினால் ஆன மாஸ்க் செய்துள்ளார். இந்த மாஸ்க் விலை ரூ. 2.75 லட்சம். மாஸ்க் செய்ய 46.5 கிராம் அளவிலான 18 காரட் தங்கத்தை பயன்படுத்தியுள்ளார்.
கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் சுந்தரம் ஆச்சார்யா. கோயம்புத்தூர் புறநகரில் இருக்கும் தொப்பம்பட்டியைச் சேர்ந்தவர். தங்க நகை பொற்கொல்லர். இவர் தங்கத்திலான, வெள்ளியிலான மாஸ்க் செய்து அசத்தியுள்ளார். தங்க மாஸ்க்கை ரூ. 2.75 லட்சம் மதிப்பில், 46.5 கிராம் அளவிலான 18 காரட் தங்கத்தைப் பயன்படுத்தி செய்துள்ளார். இதேபோல், 40 கிராம் வெள்ளியை பயன்படுத்தி வெள்ளி மாஸ்க் செய்துள்ளார். இதன் மதிப்பு ரூ. 15,000.
இதுகுறித்து அவர் அளித்து இருக்கும் பேட்டியில், ''உலகம் முழுவதும் இன்று கொரோனா வைரஸ் தொற்று மக்களை ஆட்டுவித்து வருகிறது. இந்த சூழலில் தங்கத்தில் மாஸ்க் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், அதன் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்ற தங்கம் மற்றும் வெள்ளியினால் இரண்டு மாஸ்க்குகளை செய்தேன். இன்று மாஸ்க்கும், மனிதர்களும் பிரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தங்கத்தில் மாஸ்க் செய்ய ஏழு நாட்களும், வெள்ளியில் மாஸ்க் செய்ய ஆறு நாட்களும் பிடித்தது.
நான் இந்த மாஸ்க் செய்வதைப் பார்த்து எனக்கு ஆர்டர்களும் வந்துள்ளன. 5 தங்க நகைக் கடைக்காரர்களிடம் இருந்து 9 ஆர்டர்களும், பெங்களூரு, சென்னை, ஐதராபாத், சண்டிகர், புதுடெல்லி ஆகிய இடங்களில் இருந்தும் ஆர்டர்கள் வந்துள்ளன. மூன்று தொழிலதிபர்கள் வெள்ளி மாஸ்க் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளனர். விலைகளில் சிறிது விட்டுக் கொடுத்து தொழில் செய்கிறேன்'' என்றார்.
இவரது பெயர் ஏற்கனவே இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் கடந்த 2019ல் பதிவாகி இருக்கிறது. ஐந்து வயது பெண் குழந்தைக்கு வெறும் 5.3 கிராமில் ஒட்டியாணம் செய்து அசத்தி இருந்தார். இதற்காக ராதாகிருஷ்ணன் கவுரவிக்கப்பட்டார்.
முருகன் கையில் ஏன் கூரிய வேல்.. எஸ்எஸ்ஆர் பேசும் சூப்பர் வசனம்.. வைரலாகும் வீடியோ!
புனே, சூரத், கட்டாக் ஆகிய இடங்களிலும் தங்க, வைர, வெள்ளி மாஸ்க்குகளை செய்து மக்கள் அணிந்து வரும் நிலையில் இந்தப் பட்டியலில் கோயம்புத்தூரும் இணைந்துள்ளது.