எனக்கு ஏன் ஆம்லெட் போடல.. நண்பருக்கு சரமாரியாக குத்து.. கோவையை அதிரவைத்த கொலை
கோவை: கேரளாவைச் சேர்ந்த 5 பேர் கோவையில் செக்யூரிட்டி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர். அதில் இரண்டு பேருக்கு மோதல் வெடித்துள்ளது. அதுவும் தனக்கு ஆம்லெட் போட்டு தரவில்லை என்ற காரணத்தால் தனது நண்பரை கொலை செய்தவரை மதுக்கரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சமீபகாலமாக சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. போதை மருந்து புழக்கம் அதிகரித்துள்ளது என்று அதிமுக, பாஜக, நாதக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷெரிப் (வயது 50). இவர் கோவை செட்டிப்பாளையம் தனது நண்பர்களுடன் அறை எடுத்து தங்கியுள்ளார். அதன்படி ஷெரிப்புடன், வினோத் (59), சந்தோஷ் (வயது 45), சிவராமன் (48), ஜார்ஜ் குரியன் (48) தங்கியிருந்தார்.
இவர்களில் அனைவருமே கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் செட்டிப்பாளைய அருகே உள்ள ஒரட்டுகுப்பை நேருநகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர். அனைவருமே தனியார் செக்யூரிட்டி ஏஜென்ஸி நிறுவனத்தில், செக்யூரிட்டிகளாக பணியாற்றி வருகின்றனர்.
அனைவரும் வீட்டை ஷேரிங் அடிப்படையில் பகிர்ந்துள்ளதால், அவர்களாக பேசி சில விதிகளை வகுத்துள்ளனர். அதன்படி 5 பேர்களில் ஒவ்வொரு நாளும், ஒருவர் சமைக்க வேண்டும் என்ற முறையை கடைபிடித்து வந்துள்ளனர்.
இதில் தான் பிரச்னை வெடித்துள்ளது. நேற்று முன்தினம் ஷெரிப்பின் நாள் வந்துள்ளது. இதனால், அன்றைய தினம் வீட்டில் உள்ள அனைவருக்கும் அவர்தான் சமையல் செய்துள்ளார். அப்போது ஷெரிப் தனக்கு மட்டும் ஆம்லெட் செய்து சாப்பிட்டுள்ளார். வீட்டில் இருந்த மற்றவர்களுக்கு அவர் ஆம்லெட் செய்து கொடுக்கவில்லை.
இது வீட்டில் இருந்த மற்றவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஜார்ஜ் குரியன் ஏன் எங்களுக்கு ஆம்லெட் போட்டுக் கொடுக்கவில்லை. என்று ஷெரிப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது அவர்கள் மதுபோதையில் இருந்துள்ளனர்.
இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின்போது ஷெரிப் கோபமடைந்துள்ளார். ஒருகட்டத்தில் அவர் ஜார்ஜ் குரியனின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அதில் ஆத்திரமடைந்த ஜார்க், சமையலறைக்கு சென்று கத்தி எடுத்துவந்து ஷெரிப்பை சரமாரியாக குத்தியுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஷெரிப் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடித்துள்ளார். இந்த கொலை வெறி தாக்குதலில் ஷெரிப்பின் வயிற்று பகுதியில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது.
அருகில் இருந்தவர்கள் ஷெரிப்பை மீட்டு மதுக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரின் உடல்நிலை மோசமாக இருந்த காரணத்தால், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டது.
அதனடிப்படையில் ஷெரிப் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மதுக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து ஜார்ஜ் குரியனை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ஷெரிப்பின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு, அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆம்லெட்டுக்காக உடன் பணியாற்றும் நண்பரை கொலை செய்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications