கோவை தேக்கம்பட்டியில் வாக்களித்தார் 108 வயது இயற்கை விவசாயி பாப்பம்மாள்!
கோவை: கோவை தேக்கம்பட்டியில் 108 வயது வாக்காளர் பத்மஸ்ரீ பாப்பம்மாள் வரிசையில் நின்று வாக்களித்தார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முதல் கட்டமாக இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வரிசையில் நிற்பவர்கள் அனைவரும் வாக்களிக்கலாம்.

தமிழகத்தில் மொத்தம் வாக்காளர்கள் 6.23 கோடி பேர் உள்ளனர். முதல் முறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர் உள்ளனர். அது போல் சிவிஜில் செயல் மூலம் 4,861 புகார்கள் வந்தன. அவற்றில் 22 புகார்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. மற்றவை தீர்வு காணப்பட்டன.
தமிழகத்தில் இன்று நடைபெறும் மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு பாதுகாப்பு பணியில் 1.3 லட்சம் காவலர்கள் ஈடுபடுத்தப்படுவர். தமிழகத்தில் 68,321 வாக்குச் சாவடிகள் உள்ளன. இவற்றில் பதற்றமான வாக்குச் சாவடிகளாக 8050, மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளாக 183 கண்டறியப்பட்டுள்ளன.
இந்த தேர்தலுக்கு மொத்தம் 1.58 லட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை முதலே நடிகர்கள், அரசியல்வாதிகள் என வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். அந்த வகையில் பத்மஸ்ரீ விருது பெற்ற கோவையை சேர்ந்த 108 வயது மூதாட்டி பாப்பம்மாள் தேக்கம்பட்டியில் வாக்களித்தார்.
யார் இந்த பாப்பம்மாள்: கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள். 108 வயதான இவர் ரசாயன உரங்கள் இன்றி இயற்கை முறையிலேயே விவசாயம் செய்து வருகிறார்.
அவரது இந்த ஈடுபாட்டையும் சாதனையையும் பாராட்டி அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இவர் 108 வயதிலும் வயலில் இறங்கி சுறுசுறுப்பாக இயங்குகிறார்.
வேளாண்துறையில் முன்னோடியாக கருதப்படுகிறார். இவர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளார். தனது தள்ளாத வயதிலும் 2.5 ஏக்கர் நிலத்தில் ஒவ்வொரு நாளும் வேலை செய்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு கோவை வந்த பிரதமர் மோடி, பாப்பம்மாள் காலில் விழுந்து வணங்கினார்.
பாப்பம்மாள் இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இயங்க காரணம் அவர் தினமும் ஆட்டிறைச்சி பிரியாணி சாப்பிடுவார். அதுவும் இலையில் சூடாக சாப்பிடுவார். தட்டில் சாப்பிட மாட்டார்கள். அது போல் இவர் காபி, டீ குடிக்க மாட்டார். சூடான தண்ணீரை மட்டுமே குடிப்பார்.
இவர் 1959 ஆம் ஆண்டு தேக்கம்பட்டி ஊராட்சியின் வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பஞ்சாயத்து ஒன்றியத்தில் கவுன்சிலராகவும் தேர்வு செய்யப்பட்டார். இவர் திமுக உறுப்பினராகவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தீவிர ரசிகையும் ஆவார்.












Click it and Unblock the Notifications