கோவையில் ஏசி வாங்க ஆன்லைனில் பணம் செலுத்தி மோசடி! ரூ 72 ஆயிரத்தை ஏமாற்றிய கும்பல் கைது!
கோவை: ஏசி வாங்க ஆன்லைனில் பணம் அனுப்புவதாக கூறி கோவையில் ஒரு கடை உரிமையாளரை ஏமாற்றிய கும்பலை போலீஸார் தேடி வருகிறார்கள்.
கோவை மாவட்டம் சூலூர், போகம்பட்டியில் ஒரு ஏசி விற்பனை கடை இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை தினேஷ்குமார் நடத்தி வருகிறார். கடந்த நவம்பர் மாதம் மர்ம நபர் ஒருவர் வாட்ஸ் ஆப் மூலம் தினேஷ் குமாரை தொடர்பு கொண்டாராம்.

அப்போது எதிர்முனையில் பேசிய நபர் தன்னை சிவகுமார் என அறிமுகம் செய்து கொண்டாராம். மேலும் தான் பிரணவ் ஹார்டுவேர்ஸ் என்ற நிறுவனத்தை வைத்து நடத்தி வருவதாகவும் தெரிவித்தாராம். தனக்கு ப்ளூ ஸ்டார் ஸ்பிளிட் ஏர் கண்டிஷனர் வாங்க வேண்டும் என கூறினார்.
அதுகுறித்து தகவல்களை தெரிவிக்குமாறு கேட்டதன் பேரில் தினேஷ், அந்த ஏசியின் விலை, அதன் சிறப்புகள் உள்ளிட்டவைகளை சிவகுமாருக்கு போனில் தெரிவித்தாராம். இதையடுத்து சிவகுமாரும் அந்த ஏசியை வாங்க விரும்புவதாக கூறி தனது நிறுவனத்தின் பெயர், ஜிஎஸ்டி எண், உள்ளிட்டவற்றை தினேஷின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பினாராம்.
பின்னர் ரூ 72 ஆயிரம் டெபிட் செய்தது போல் ஒரு ரசீதையும் தினேஷுக்கு அனுப்பி, ஏசிக்கான பணத்தை செலுத்திவிட்டதாகவும் ரேபிட்டோ டெலிவரி நபரை அனுப்புவதாகவும் அவரிடம் ஏசியை டெலிவரி கொடுங்கள் என்றும் கூறினாராம்.
இதைத் தொடர்ந்து 72 ஆயிரம் மதிப்பிலான ஏசி இயந்திரங்களை எடுத்துக் கொண்டு அந்த டெலிவரி நபர் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து தனது வங்கிக் கணக்கை தினேஷ் சரிபார்த்தபோதுதான் ரூ 72 ஆயிரம் பணம் வரவில்லை என்பது தெரியவந்தது. உடனே சிவகுமார் போன் செய்த எண்ணுக்கு தொடர்பு கொண்டார்.
அப்போது அந்த எண் ஸ்விட்ச் ஆப் என வந்தது. பின்னர் பிரணவ் என்டர்பிரைசஸ் என்பதை கூகுளில் தேடி பார்த்தார். அப்போது தினேஷுக்கு சாதகமான எந்த ஒரு விஷயமும் நடக்கவில்லை. இதையடுத்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதையடுத்து கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த ஷேக் அப்துல் காதர், கோட்டைமேடு பகுதியை சேர்ந்த முகமது அலி, குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த மன்சூர் அலி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தியதில் ஆள் மாறாட்டம் செய்து ஆன்லைன் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இது போல் ஆன்லைன் மோசடிகளை நம்பி வியாபாரிகளும் பொது மக்களும் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications