ஆக்ரோஷமாக பாயும் வெள்ளம்.. கோவை குற்றாலம் அருவியில் குளிக்க தடை! சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம்
கோவை: கோவையில் நேற்று முதலே பெய்து வந்த கனமழையால், கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது கோவை குற்றாலம். சாடிவயல் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
கோவையின் பிரதான சுற்றுலாத்தலமான இந்தப் பகுதிக்கு உள்ளூர் வாசிகளும், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோரும் வந்து செல்கின்றனர். இந்த நீர்வீழ்ச்சியில், வாரந்தோறும் திங்கட்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கோடை காலம் காரணமாக பள்ளிகள் விடுமுறை மற்றும் வெள்ளியங்கிரி மலையேற வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களில் கடந்த சில நாட்களாக கோவை குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது.
குடும்பத்துடன் ஏராளமானோர் கோவை குற்றாலத்திற்கு வருகை தந்து கொண்டிருந்தனர். கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலா பயணிகள் சாடிவயல் பகுதியில் உள்ள நீண்ட வரிசையில் காத்திருந்து அனுமதி சீட்டை பெற்றனர். சுற்றுலா பயணிகள், அருவியில் மிதமான அளவில் கொட்டும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து பெருமளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கோவை குற்றாலம் அருவி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
மேலும், இன்றும் நாளையும் (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) இரண்டு நாள்களுக்கு கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து கோவை குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதியும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
மேலும், அருவியில் நீர்வரத்து சீராகும் வரை கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மூடப்படும். மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வனத் துறையின் இந்த அறிவிப்பிற்கு மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது,.












Click it and Unblock the Notifications