கோவையில் ரூ.17 லட்சம் தங்கத்தை கண்டதுமே சபலம்.. சொந்த செலவில் சூனியம் வைத்த நபர்.. இப்படியொரு புதுமை
கோவை: சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்டார் கார்த்தி.. ஊர் முழுக்க கடன் வாங்கி வைத்துவிட்டு, அந்த கடனை அடைக்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.. அப்போதுதான் ஒரு ஐடியா கார்த்திக்கு வந்துள்ளது.. ஆனால் வெற்றிகரமாக செய்து முடித்ததுமே, போலீசார் கோழி அமுக்குவது போல கார்த்திகை சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர். இப்போது கார்த்தியிடம் விசாரணை தீவிரமாக நடக்கிறது. என்ன நடந்தது கோவையில்?
கோவை கெம்பட்டி காலனி பாளையம்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சரவணமூர்த்தி.. இவருக்கு 40 வயதாகிறது.. இவர் வீட்டின் ஒரு பகுதியில் நகைப்பட்டறையை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த 10 வருடமாக கார்த்தி என்ற 30 வயது இளைஞர் வேலை பார்த்து வருகிறார்.. செல்வபுரம் எல்ஐசி காலனியை சேர்ந்தவர் கார்த்தி.

17 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள்
கடந்த 4ம் தேதி சரவணமூர்த்தி, ரூ.17 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்கக்கட்டியை கார்த்தியிடம் தந்து, ஆபரணம் செய்யும் இடத்தில் தந்துவிடும்படி கூறியிருக்கிறார்.. கார்த்தியும் தங்கக் கட்டிகளை வாங்கி கொண்டு சென்றார்.. ஆனால், நீண்ட நேரமாகியும் கார்த்தி திரும்பிவரவில்லை.. இதனால் சரவணமூர்த்தி, கார்த்திக்கு போன் செய்து பார்த்தபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த சரவணமூர்த்தி அவரை தேடி வீட்டிற்கு சென்றார். வீட்டிலும் கார்த்தி இல்லை என்பது தெரியவந்தது.. இதையடுத்து, நகையுடன் கார்த்தி மாயமாகிவிட்டதால், பெரியகடை வீதி போலீசில் புகார் அளித்தார் சரவணமூர்த்தி.. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை வலைவீசி தேடி வந்தனர்... ஆனால், கார்த்தி பற்றின எந்த துப்பும் போலீசுக்கு கிடைக்கவில்லை.. இதையடுத்து, கார்த்தியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
சுற்றி வளைத்து கைது
தனிப்படையினர் கார்த்தியை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது செட்டி வீதியில் கார்த்தி பதுங்கியிருப்பது தெரியவந்தது.. அங்கு அவரை சுற்றி வளைத்து கை துசெய்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர்.. 17 லட்சம் மதிப்புள்ள நகைகள் எங்கே என்று கேட்டு விசாரணையை துவங்கினார்கள்.. அப்போது அதிர்ச்சிகரமான பல தகவல்களை போலீசாரிடம் சொன்னாராம் கார்த்தி.
இது குறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, "கைதான கார்த்தி, லட்சக்கணக்கில் கடன் வாங்கி வைத்திருக்கிறார்.. இதனால் என்ன செய்வது? கடனை எப்படி அடைப்பது? என்று தெரியாமல் விழித்து வந்திருக்கிறார்.. அப்போதுதான், பில்லிசூனியம் வைத்துவிட்டால், கடனிலிருந்து தப்பிக்கலாம் என்று ஐடியா கண்டுபிடித்துள்ளார்.. இதற்காக ஆடு, கோழிகளை காவு கொடுத்து வந்துள்ளார்... இப்படி செய்ததே, அந்த நேரத்தில் கார்த்திக்கு கடன் தொல்லை குறைந்ததாக நம்பியிருக்கிறார்.
தங்கக் கட்டிகள் எங்கே
எனினும் முழுமையாக கடனிலிருந்து விடபட, தான் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து தங்கக்கட்டியை திருடி சூனியம் வைக்க திட்டமிட்டுள்ளார்.. அப்போதுதான், கடந்த 4ம் தேதி தன்னுடைய முதலாளி கொடுத்த தங்கக்கட்டியை எடுத்து கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலைக்கு சென்றிருக்கிறார்.. அங்கு ஆடு, கோழியை பலி கொடுத்துள்ளார்..
பிறகு, தன்னுடைய முதலாளி நகை கொடுத்ததையே மறந்துவிட வேண்டும், தான் எக்காரணம் கொண்டும் போலீசாரிடம் பிடிபடக்கூடாது என்று சொல்லி கொண்டே சூனியம் வைத்துள்ளார்.. அதற்கு பிறகும் சொந்த ஊர் போகாமல், மனைவி, குழந்தைகளுடன் சென்னை, பாண்டிச்சேரி என டூர் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
சபாஷ் போலீஸ் - பாராட்டு
சூனியம் வைத்தாகிவிட்டது, இனி யாராலுமே தன்னை பிடிக்க முடியாது என்று நம்பி, மறுபடியும் கோவையில் கால் வைத்துள்ளார்.. ஆனால், கோவையில் எந்நேரமும் கார்த்தியை வலைவீசி தேடி கொண்டிருந்த தனிப்படையினர், கார்த்திகையை பார்த்ததுமே மடக்கி பிடித்துவிட்டனர்.. இனிமேல்தான், அந்த தங்கக்கட்டியை விற்க திட்டமிட்டிருந்தார், ஆனால், அவர் விற்பதற்கு முன்பாக நாங்கள் தங்க கட்டிகளை மீட்டு விட்டோம்" என்றனர்..
கார்த்தியை சரியான நேரத்தில், சாதுர்யமாக கைது செய்த தனிப்படையினருக்கு இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி பரிசு கொடுத்து பாராட்டினார். இப்போது சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட கார்த்தி சிறையில் உள்ளார்.












Click it and Unblock the Notifications