கோவையின் அன்புமிக்க ‘சுல்தான் தாத்தா’ காலமானார் - போலீஸார் மரியாதை
கோவை: கோவை மக்களால் டிராஃபிக் தாத்தா, சுல்தான் தாத்தா என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்த சுல்தான் உடல்நலக் குறைவால் காலமானார். லட்சக்கணக்கான மக்கள் கூடும் டவுன்ஹால் பகுதியில் இரவு பகலென்று பாராமல் காவல் துறையினருக்கு உறுதுணையாக போக்குவரத்தை சரிசெய்து வந்த சுல்தானின் உடலுக்கு காவல் துறையினர் மரியாதை செலுத்தினர். இவரது மறைவு கோவை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுல்தான் தாத்தா
கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் 87 வயதான முதியவர் சுல்தான். கோவை மக்கள் பலராலும் டிரஃபிக் தாத்தா, சுல்தான் தாத்தா என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்தார். கோவையின் போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளான டவுன்ஹால், உக்கடம், கரும்புக்கடை பகுதி வழியாக சென்ற எல்லோரும் ஒருமுறையேனும் இவரை கடந்து சென்றிருப்பார்கள். அப்பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்து வந்தவர்.

போக்குவரத்து நெரிசல்
சுல்தான் தாத்தா பெரியகடை வீதி பகுதியில் உள்ள அத்தர் ஜமாத் மசூதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வந்தார். அங்கு தனது வேலை முடிந்ததும் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடத்தில் போக்குவரத்தை சரி செய்து வந்தார்.
பொதுநலத்தோடு போக்குவரத்தை சீர்செய்யும் இவருடைய சமூக அக்கறையைப் பார்த்து காவல் துறையினரே சுல்தானுக்கு போக்குவரத்து சரிசெய்வது தொடர்பான பயிற்சியை அளித்தனர். நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் டவுன்ஹாலில் பகுதிகளில் காலை, மாலை என எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருக்கும். இவரது வீடு சற்று தொலைவில் இருப்ரதால் சுல்தான் பெரும்பாலும் மசூதியிலேயே தங்குவது தான் வழக்கம்.
உடல்நலக்குறைவு
அப்போது, தனது பணியை முடித்ததும் இரவு பகல், மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் அப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கத் தொடங்கிவிடுவார். வயது முதிர்வால் சமீபகாலமாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது.
அண்மையில் குடலிறக்க அறுவை சிகிச்சையம் மேற்கொள்ளப்பட்டதால் கடந்த 10 நாட்களாக கடும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவு கோவை பொது மக்கள் மற்றும் காவல்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸார் மரியாதை
காவல்துறையினர் நேரடியாக சென்று அவரின் உடலுக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். அவரது உடல் துடியலூர் அடக்க ஸ்தலத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. போக்குவரத்துக் காவலர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். சுல்தான் தாத்தாவின் மறைவு கோவை மக்கள் மற்றும் போக்குவரத்து காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications