ஹோட்டலில் புகுந்து மக்களை காட்டுத்தனமாக அடித்த காட்டூர் எஸ்ஐ சஸ்பெண்ட்.. கோவை கமிஷனர் அதிரடி
கோவை: கோவையில் ஹோட்டலில் புகுந்து பொதுமக்களை காட்டுத்தனமாக லத்தியால் தாக்கிய காட்டூர் எஸ்ஐ முத்து கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து காவல் துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக வீசி வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.
அதன்படி பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல்கள் இரவு 11 மணிக்கு மேல் இயங்கக் கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

காந்திபுரம் பேருந்து நிலையம்
இந்த நிலையில் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் இரவு 10.20 மணிக்கெல்லாம் ஷட்டர் பாதி அளவு மூடப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த வெளியூர் பெண் பயணிகள் மிகவும் பசிக்கிறது, உணவு கொடுங்கள் என கேட்டனர்.

10.20 மணி
இதனால் பரிதாபப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் மோகன்ராஜ், அவர்களை உள்ளே அழைத்து உணவு கொடுத்துள்ளார். அப்போது சிறிது நேரத்தில் காட்டூர் எஸ்ஐ முத்து அந்த ஹோட்டலுக்கு வந்துள்ளார். அப்போது மணி 10.20தான் என்ற போதிலும் வாடிக்கையாளர்களை விரட்டியுள்ளார்.

ஆட்சியரிடம் புகார்
அப்போது அவர் லத்தியால் சாப்பிட வந்தவர்களை அடித்ததால் பெண் உள்பட 4 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வைரலானதை அடுத்து முத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். ஆனால் இந்த இடமாற்ற நடவடிக்கை போதாது, அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹோட்டல் உரிமையாளர் மோகன்ராஜ், ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

சமூகவலைதளங்கள்
பசிக்காக உணவு சாப்பிட வந்தவர்களை பெண்கள் என்றும் பாராமல் லத்தியால் எஸ்ஐ அடித்தது காட்டுமிராண்டித்தனம் என சமூகவலைதளங்களில் கண்டனங்கள் எழுகின்றன. இந்த நிலையில் எஸ்ஐக்கு எதிராக பலர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதனால் எஸ்ஐ முத்துவை காவல் துறை ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வாதம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications