கோவை தெற்கு தொகுதி பஞ்சாயத்து.. குறுக்கே வந்த நாம் தமிழர்.. மனுவில் ட்விஸ்ட்
கோவை: கோவை தேர்தல் களம் கொதிகொதித்து கொண்டிருக்கிறது. செந்தில் பாலாஜி, வேலுமணி இடையே அதிகார போட்டி உச்சத்தில் உள்ளது. கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கூறி அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். கோவை தெற்கில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்கிற போராட்டத்தை அதிமுக கையில் எடுத்துள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர், கோவை தெற்கு தொடர்பாக ஒரு பரபரப்பு மனுவை அளித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் பணப்பட்டுவாடா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் , அதிமுக பாஜகவினருடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். கோவை தெற்கில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.

தேர்தலை ரத்து செய்ய கோரி போராட்டம்
அம்மன் அர்ஜுனன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கோவையை கலவர பூமியாக்க வேண்டும் என்று பணியாற்றி வருகிறார்கள். மக்களை பற்றி அக்கறை இல்லாமல், பணம் சிக்கவில்லை என்று கூறுகிறார்கள். அராஜகத்தன் உச்சம் கோவையில் நடக்கிறது. சாதாரண மக்களை கொடுமைப்படுத்தும் அதிகாரிகள், பணத்துடன் அளிக்கும் புகார்களில் நடவடிக்கை எடுப்பதில்லை.
கோவையில் தேர்தலை ரத்து செய்து, அமைதியான பிறகு தேர்தலை நடத்த வேண்டும்" என்று கூறினார். மேலும் நாளை வாக்குப்பதிவின்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட அனுமதி கேட்டுள்ளனர். அதனுடன் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஒவ்வொரு வார்டில் இருந்தும் தேர்தலை ரத்து செய்ய கோரி அதிமுகவினர் புகார் அனுப்பி வருகிறார்கள்.
குறுக்கே வந்த நாம் தமிழர்
இதனால் கோவை தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. கோவை தேர்தல் அதிகாரி ஒரு தலை பட்சத்துடன் செயல்படுகிறார் என்று அவருக்கு மிக்சர் வழங்கும் நூதன போராட்டத்திலும் அதிமுக, பாஜக கூட்டணியினர் ஈடுபட்டனர். ஆனால் எல்லா அரசியல் புகார்களிலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய கூடாது என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேரறிவாளன் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார். இதுகுறித்து பேரறிவாளன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "திமுக, அதிமுக 2 கட்சிகளுமே மக்களுக்கு போட்டி போட்டு பணப்பட்டுவாடா செய்கிறார்கள்.
வேட்பாளர்கள் மீது புகார்
தேர்தல் விதிகளை மீறுவதாக திமுக, அதிமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். நாங்கள் இந்த தேர்தலுக்காக கடினமாக உழைத்துள்ளோம். எங்களை போல சில வேட்பாளர்களும் உள்ளனர். தவறு செய்த ஒரு சிலருக்காக இங்கு தேர்தலை ரத்து செய்ய கூடாது. எனவே பட்டுவாடா செய்யும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications