பிரச்சாரத்தில் சட்டென கண்ணீர் மல்கிய அதிமுக வேட்பாளர்.. நெகிழ்ந்த கோவை கிராமம்
கோவை: தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குறுதிகள், பிரச்சாரம், வியூகங்கள் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிரச்சார களத்தில் ஒவ்வொரு வேட்பாளரும் ஒரு வியூகத்தை கடைபிடிப்பார்கள். வாக்காளர்களை கவர்வதற்காக நூதன பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள். கோவையில் அதிமுக எம்எல்ஏவும், சூலூர் வேட்பாளருமான கந்தசாமி தன்னுடைய சொந்த ஊரில் பிரச்சாரம் செய்யும் போது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டு அழுத சம்பவம் நடந்துள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் வி.பி.கந்தசாமி, திமுக சார்பில் தளபதி முருகேசன் போட்டியிடுகிறார்கள். சூலூர் தொகுதியில் அதிமுக தொடர்ந்து வெற்றி கொண்டிருக்கிறது. அங்கு கந்தசாமி தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறை அங்கு வெற்றி பெறுவதற்கு அவர் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார்.

தேர்தல் பிரசாரம்
கந்தசாமி இன்று தன்னுடைய சொந்த ஊரான வதம்பசேரியில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். முன்னதாக அங்குள்ள மாகாளி அம்மன் கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். பிறகு அங்கு கூடியிருந்த மக்களிடையே அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மக்களிடம் பேசிய கந்தசாமி, "என்னுடைய சொந்த ஊர் மக்கள் எனக்கு அளித்து வரும் தொடர் ஆதரவு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
கண்ணீர் விட்டு அழுகை
மூன்றாவது முறையாகத் எனக்கு சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைமைக்கும், அதற்கு உறுதுணையாக இருக்கும் தொகுதி மக்களுக்கும் நன்றி. மக்கள் நலனுக்காகத் தான் நான் என்றும் அர்ப்பணிப்புடன் பாடுபடுவேன்" என்றார். ஒருகட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு அவர் மேடையிலேயே கண்ணீர் மல்கினார்.
குடும்பத்தினரும் அழுகை
கந்தசாமி அழுவதை பார்த்த அவரின் மனைவி ராஜாமணி மற்றும் மகன் பிரபு ராம் ஆகியோரும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டனர். வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சியில் அழுததைக் கண்ட ஊர் மக்கள் மற்றும் தொண்டர்களிடையே இந்தச் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவரை மக்கள் ஆறுதல்படுத்தினார்கள். பிறகு கந்தசாமி தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
வீடியோ வைரல்
கந்தசாமிக்கு முன்னதாக அவரின் சகோதரர் கனகராஜ் சூலூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். அதிமுகவுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் பகுதி மக்கள் எப்போதும் ஆதரவளித்து வருகிறார்கள். அதனால் தான் கந்தசாமி உணர்ச்சிவசப்பட்டதாக கூறுகிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications