கோயம்புத்தூர் பழனிசாமி இப்ப ஹேப்பி.. ஒரே நாளில் மாறிய காட்சி.. 1 லட்சம் வரி போட்ட அதிகாரி சஸ்பெண்ட்
கோவை: கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 8-வது வீதியில் ஓட்டு வீட்டில் வசித்து வருபவர் பழனிசாமி. இவர் காவலாளியாக அந்த பகுதியில் வேலை செய்து வருகிறார். இவர் வீட்டின் முன்பகுதியை மெஸ் நடத்த வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் அவரது ஓட்டு வீட்டுக்கு ஒரு லட்சம் வரி போடப்பபட்டது. இதுபற்றி செய்திகள் வெளியான நிலையில், வரி வசூலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 2 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும், தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக மிக அதிவேகமாக வளரும் நகரமாகவும் கோவை இருக்கிறது. கோவை மெட்ரோ பகுதியில் சுமார் 35 லட்சம் முதல் 40 லட்சம் மக்கள் வசிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. சுயதொழில்களாலும், சிறுகுறு நிறுவனங்களாலும் மிகப்பெரிய தொழில் வளர்ச்சி அடைந்த நகரமாக கோவை திகழ்கிறது. கோவையில் மிகப்பெரிய அளவில் தொழில் நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் கல்வி நகரம் என்கிற அளவில் ஏராளமான கல்லுரிகள் கோவையில் தான் உள்ளன.

முன்பெல்லாம் கோவைக்குள் தான் நிறுவனங்கள், கம்பெனிகள் எல்லாம் இருக்கும். இப்போது எல்லாமே வீடுகளாக மாறிவிட்டன. கம்பெனிகள் பல அவினாசி நோட்டிற்கும், கணபதியை தாண்டியும் போய்விட்டன. பல நிறுவனங்கள் கோவை மாநகரன் புறநகர் பகுதிகளில் தான் இப்போது உள்ளன. கோவை மாநகரம் முழுக்கமுழுக்க குடியிருப்பு பகுதி என்கிற நிலையில் உள்ளது. அதுமட்டுமின்றி கோவை மாநகரம் மிகப்பெரிய மக்கள் அடர்த்தி மிகுந்த நகரமாகவும் உள்ளது. இதன் காரணமாக கோவை மாநகரம் விரிவடைந்து வருகிறது. வரும் 2026ல் விரிவாக்கத்திற்கு பிறகு சென்னை மாநகராட்சிக்கு நிகரான பரப்பளவில் கோவை மாநகரம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கோவை மாநகராட்சி, மாநகராட்சி எல்லைக்குட்டபட்ட பகுதிகளுக்கு வீடு, குடிநீர், கழிவு நீர் உள்ளிட்ட வரிகளை விதித்து வருகிறது. அந்த வகையில் கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 8-வது வீதியில் வசித்து வரும் 76 வயதாகும் பழனிச்சாமிக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. காவலாளியான இவர் அந்த பகுதியில் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். வீட்டின் முன்புற பகுதியை 'மெஸ்' நடத்துவதற்காக வாடகைக்கு விட்டு உள்ளார்.
ஆனால் டிரோன் சர்வே எடுத்த கோவை மாநகராட்சி அலுவலர்கள், வீட்டின் மொத்த பரப்பையும் வணிக பகுதியாக மாற்றி சொத்து வரி மறுசீராய்வு செய்திருக்கிறார்கள். இவர் தனது வீட்டுக்கு இதுவரை வரி ரூ.2,182 செலுத்தி வந்திருக்கிறார். வரி சீராய்வு செய்ததால் இனி 6 மாதத்துக்கு ஒருமுறை ரூ.51 ஆயிரத்து 322 சொத்து வரி, குப்பை வரி ரூ.300, அபராத கட்டணம் ரூ.1,050 சேர்த்து ஒரு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 344 செலுத்த வேண்டும் என கோவை மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக சமூகவலைத்தளங்களில் ஓட்டு வீட்டில் பழனிச்சாமி பரிதாபமாக நின்ற வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.
இத்தகவல் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இந்த தவறுக்கு காரணமான வரி வசூலரை பணியிடை நீக்கம் செய்யவும், மண்டல உதவி வருவாய் அலுவலருக்கு மெமோ கொடுக்கவும் உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி துணை ஆணையாளர் குமரேசன் விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தினார் அதன்படி துணை ஆணையாளர் விசாரணை நடத்தினார். டிரோன் மூலம் ஆய்வு செய்து வரி சீராய்வு செய்தபோது பணியாற்றிய வரி வசூலர் ஜெய்கிருஷ்ணன் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய வரி வசூலர் ஆனந்த் பாபு, உதவி வருவாய் அலுவலர் கிருபாகரன் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டு உள்ளதாக கோவை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications