ஹிஜாப் சேலஞ்ச் வீடியோவுக்கு சைபர் தீவிரவாத பிரிவில் வழக்கு.. கோவையில் நடந்தது என்ன
கோவை: பெண்களிடம் ஹிஜாப் சேலஞ்ச் நடத்திய யூட்யூபர் அனாஸ் அகமது கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். சுமார் 50 நாட்கள் சிறை வாசத்துக்குப் பிறகு, சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. மக்களின் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட வீடியோவுக்கு சைபர் தீவிரவாத பிரிவில் நடவடிக்கை எடுப்பதா என்று காவல் துறை மீது விமர்சனம் எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சேர்ந்தவர் அனாஸ் அகமது (வயது). இவர் கோவை போத்துனூர் பகுதியில் வசித்து வருகிறார். விஜே தொகுப்பாளரான இவர், AL Kaswa TV என்ற யூட்யூப் சேனலில் சில வீடியோக்கள் தொகுத்து வழங்கினார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஹிஜாப் சேலஞ்ச் நடத்தியிருந்தார்.

மாற்று மத பெண்களிடமும் ஹிஜாப் அணிய செய்து, அந்த உணர்வு எப்படி இருக்கிறது என்று கேட்டு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதுகுறித்து பாரத்சேனா அமைப்பின் குமரேசன் என்பவர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் கோவை சைபர் க்ரைம் போலீஸ் வழக்குப் பதிவு செய்து அனாஸ் அகமதுவை கைது செய்தனர்.
அப்போதே இந்த கைது நடவடிக்கைக்கு எதிரான பல்வேறு கருத்துகள் வந்தன. செப்டம்பர் 5 ஆம் தேதி கைது போலீஸால் கைது செய்யப்படும்போது, அனாஸ் மிகுந்த அதிர்ச்சியில் இருந்தார். காரணம் அவர் சைபர் தீவிரவாதம் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டிருந்தார். சுமார் 50 நாட்கள் சிறையில் இருந்த அவருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்த மோசமான நடவடிக்கை மூலம் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் முஸ்லிம் மக்கள் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை காட்டுகிறது என்று அனாஸின் வழக்கறிஞர் புளியந்தோப்பு மோகன் கூறியுள்ளார். மேலும், இந்த வீடியோவில் பொதுமக்கள் தான் கலந்து கொண்டனர். யாரையும் வற்புறுத்தி அதில் பங்கேற்கச் செய்யவில்லை.
சமூகத்தில் பதற்றத்தை, பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு இல்லை. இந்த வீடியோவில் பங்கேற்ற யாருமே அவர் மீது புகார் தெரிவிக்கவில்லை என்று அனாஸ் அகமதுக்காக மோகன் வாதாடியுள்ளார். இதுகுறித்து மோகன் மேலும் கூறுகையில், தகவல் தொழில்நுட்ப பிரிவு 66 (F) வழக்கில் இணைத்ததை ஏற்க முடியாது. அந்தப் பிரிவு தேசிய பாதுகாப்பு மற்றும் சைபர் தீவிரவாதம் தொடர்புடையதாகும்.
டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தி நாட்டின் இறையான்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றை சிதைக்கும் நோக்குடன் செயல்படும்போது தான் அந்தப் பிரிவில் வழக்குப்பதிய முடியும். இணையத்தில் விவாதம் ஆகிறது என்பதற்காக, இந்தப் பிரச்சனைக்கு காவல்துறை அந்தப் பிரிவை இணைத்திருப்பது மிகைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். சட்டத்தை தவறான பயன்படுத்தி சாமானியர்களுக்கு அநீதி இழைக்க கூடாது என்றார்.
இதுகுறித்து மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறுகையில் தகவல் தொழில்நுட்ப பிரிவு 66 (A)இன் படி எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்தி சமூகவலைதளங்களில், அவதூறதாக மெசேஜ் அனுப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதை தவறான பயன்படுத்தியதால் 2015 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அந்தப் பிரிவின் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்திருந்தது.
இதனால் காவல்துறை தகவல் தொழில்நுட்பம் 66 இன் வேறு உள் பிரிவுகளை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கிறது. புகார்தாரர் புரிதல் இல்லாமல் கூறலாம். சட்டத்தை முறையாக ஆராயாமல் காவல்துறையும், முதன்மை நீதிமன்றமும் இதை ஊக்குவிக்க கூடாது. சமூக நீதி பேசும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் கருத்து சுதந்திரத்தின் நிலை இதுதானா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications