இதுதான் தமிழ்நாடு! மின்சாரம் தாக்கி கை, கால்களை இழந்த இளைஞர்! செயற்கையாக பொறுத்தி சாதித்த டாக்டர்ஸ்
கோவை: மின்சாரம் பாய்ந்த விபத்தில் கை, கால்களை இழந்த இளைஞருக்கு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெற்றிகரமாக செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டது. மீண்டும் வசந்த காலம் வந்ததால் அந்த இளைஞர் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளார்.
கோவை மாவட்டம், அன்னுார் குமரன்குன்று பகுதியை சேர்ந்த சுபாஷ் என்ற இளைஞர், கட்டட வேலை செய்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் மின்சாரம் தாக்கியதில், அவரின் இரு கை மற்றும் கால்கள் தீயில் கருகின. இதனால் தனது வாழ்க்கையே கேள்வி குறியாகி விட்டதாக கலங்கி நின்ற அந்த இளைஞர், கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்ட ஆட்சியரிடம் உதவி கேட்டு மனு கொடுத்தார்.

அதன் படி, சுபாஷுக்கு செயற்கை கை, கால்கள் பொருத்த கோவை மாவட்ட மறுவாழ்வு அலுவலர் வசந்தகுமார், அரசு மருத்துவமனை டீன் நிர்மலா ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையின் முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை நிறுவன இயக்குனர் வெற்றிச்செழியன் தலைமையில், செயற்கை அங்க வடிவமைப்பாளர்கள் குழு அமைக்கப்பட்டது. பின்னர் அந்த இளைஞருக்கு வெற்றிகரமாக செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டது
குறைந்த எடையில் செயற்கை கை, கால்கள் தயாரிக்கப்பட்டு சுபாஷுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா கூறும்போது : சுபாஷுக்கு மனரீதியான பயிற்சி, நடை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கை, கால்களை அசைத்தவாறு நன்றாக நடக்கிறார். இந்த சிகிச்சைக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். முதல்வர் விரிவான காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் முதல் முறையாக கோவை அரசு மருத்துவமனையில் தான் இரு கைகள் மற்றும் இரு கால்கள் இழந்த ஒருவருக்கு செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டு உள்ளது என்று அவர் கூறினார். செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டதால் பூரிப்படைந்த சுபாஷ், தற்போது தாமாகவே அவருடையே வேலைகளை செய்ய பயிற்சி பெற்று வருகிறார். மேலும், தங்களது மகனுக்கு, செயற்கையான முறையில் மீண்டும் கை, கால்கள் செயல்படுவதைக் கண்டு, அந்த ஏழை பெற்றோரும், சாதனை படைத்த மருத்துவர்களுக்கு, தங்களது ஆனந்த கண்ணீரை காணிக்கையாக்கின்றனர்.
தன்னம்பிக்கை இருந்தால் எவ்வளவு பெரிய இக்கட்டான சூழ்நிலையையும் சாதகமாக ஆக்கிக் கொள்ள முடியும் என்ற உதாரணத்திற்கு, சுபாஷ் என்ற இந்த இளைஞர் இலக்கணமாக திகழ்ந்து வருகிறார் என்றால் அது மிகையல்ல...












Click it and Unblock the Notifications