"60 அடி கிணறுணு கூட பாக்கலையே".. கோவையில் பெண்ணை ஃபாலோ செய்த இளைஞர்களை கலங்கடித்த ஊர்மக்கள்
கோவை: கோவை அருகே மதுபோதையில் இளம்பெண்ணை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்த இரண்டு இளைஞர்களை ஊர் மக்கள் துரத்தியதால் 60 அடி ஆழக் கிணற்றில் குதித்து தப்ப முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக தொடர்ந்து சமூக விரோத சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கஞ்சா விற்பனை, போதைப் பொருள்கள் விற்பனை, பாலியல் கொடுமை, கூட்டுப் பாலியல் கொடுமை என நாள்தோறும் ஏதாவது ஒரு சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், ஏராளமான குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

கோவை, ஏர்போர்ட் பின்புறம் காரில் இளைஞருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை, போதை ஆசாமிகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், கோவை அருகே மதுபோதையில் இளம்பெண்ணை பின்தொடர்ந்து இரண்டு இளைஞர்கள் ஆபாச வார்த்தைகளைப் பேசி தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்த ஊர் மக்கள் அவர்களை துரத்தியதால் 60 அடி ஆழக் கிணற்றில் குதித்து தப்ப முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை, பெரிய மந்திரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அவர், அந்தப் பகுதியில் உள்ள தனியார் பஞ்சு ஆலையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்கள் அந்த சிறுமியைப் பின்தொடர்ந்துள்ளனர்.
சிறுமியைப் பின்தொடர்ந்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து ஆபாச வார்த்தைகளால் பேசி தொல்லை கொடுத்துள்ளனர். இதனால், அச்சமடைந்த சிறுமி ஊருக்குள் சென்றதும் அப்பகுதி மக்களிடம் நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த ஊர்மக்கள் உடனடியாக ஒன்று திரண்டுள்ளனர். இளைஞர்களை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்த நிலையில், சிக்கிவிடுவோம் என்பதை அறிந்த இளைஞர்கள் இருவரும் தப்பி ஓடியுள்ளனர்.
மதுபோதையில் இருந்த அந்த இளைஞர்கள் தலைதெறிக்க ஓடியதில் இருட்டில் அருகில் இருந்த திறந்தவெளி கிணற்றில் பாய்ந்து குதித்தனர். சுமார் 60 அடி ஆழமுள்ள அந்தக் கிணற்றில் குதித்த இருவரும் கிணற்றுக்குள் இருந்த மரக்கிளையில் சிக்கிக் கொண்டனர். இதைக் கண்ட ஊர் மக்கள் உடனடியாக சுல்தான்பேட்டை காவல் துறை மற்றும் சூலூர் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிற்றின் உதவியைக் கொண்டு கிணற்றில் விழுந்த இருவரையும் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்டவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் சுரேஷ் (25), கோட்டைசாமி மகன் சரண் (22) என்பது தெரியவந்தது. இவர்கள் ஜல்லிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் காளான் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவது விசாரணையில் தெரியவந்தது.
இளைஞர்கள் இருவரையும் சுல்தான்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் அண்மைக்காலமாக இளைஞர்களிடையே போதைப் பழக்கம் அதிகரித்துள்ளதால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது என்றும், இதனால் வெளியில் பெண்கள் நடமாடவே அச்சப்படும் சூழல் நிலவுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications