பார்சல் டப்பாவில் ஓட்டல் பெயர் எப்படி போடலாம்? பொதுமக்கள் அவுங்க விளம்பர ஏஜென்டா? கோர்ட் தீர்ப்பு
கோவை: கோவை ஆனந்தாஸ் உணவகம் ரூ 5.71 காசுகள் கூடுதலாக பார்சலுக்கு வசூலித்ததை எதிர்த்து சட்ட கல்லூரி மாணவர் ஒருவர் வழக்கு பதிந்த நிலையில் ரூ 15 ஆயிரம் இழப்பீடாக வழங்க ஹோட்டலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷேக் முகமது. இவர் கோவை சட்டக் கல்லூரியில் 4ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வடவள்ளி பகுதியில் உள்ள பிரபல ஆனந்தாஸ் உணவகத்தில் ஷேக் முகமது பிரைடு ரைஸை பார்சல் வாங்கினார்.

இதன் விலை ரூ 160, பார்சல் செய்து கொடுக்க ரூ 5, 71 காசுகளை கூடுதலாக ஓட்டல் நிர்வாகத்தினர் வசூல் செய்துள்ளனர். ஆனால் பார்சலின் மீது அந்த உணவகத்தின் பெயர் மற்றும் லோகோ இடம்பெற்றிருந்தது.
உணவு பார்சலுக்காக தனியாக கட்டணம் வசூல் செய்த நிலையில் அதில் ஹோட்டல் லோகோவை பதித்து தன்னை விளம்பர ஏஜென்ட் போல் பயன்படுத்திக் கொண்டதை அந்த ஹோட்டல் நிர்வாகத்திடம் தட்டி கேட்டார் ஷேக் முகமது. ஆனால் அவர்களோ இது எங்கள் கம்பெனியின் பாலிசி என கூறி சரியாக பதிலளிக்கவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் ஷேக் அகமது பார்சல் சார்ஜ் குறித்து விளக்கம் கேட்டு ஆனந்தாஸ் ஹோட்டலுக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் ஹோட்டல் நிர்வாகத்தினர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனால் ஆனந்தாஸ் ஹோட்டல் நிர்வாகத்தின் மீது கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஷேக் முகமது வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் பார்சலுக்கு தனியாக கட்டணம் வசூலிக்கும் போது, அதில் ஹோட்டலின் லோகோ இடம் பெற்றிருக்க கூடாது என நீதிபதி கூறியிருந்தார். இதையடுத்து ஷேக் முகமதுக்கு இழப்பீடாக 10 ஆயிரம் ரூபாயும் வழக்கு செலவுக்கு ரூ 5 ஆயிரமும் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வெறும் ரூ 5.71 காசுகளுக்கு ஆசைப்பட்ட உணவகம் தற்போது நுகர்வோருக்கு ரூ 15 ஆயிரம் இழப்பீடாக வழங்க போகிறது. பெரும்பாலான உணவகங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயரை பார்சல் மற்றும் பைகளில் பதிவிடுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications