வாட்ஸ்அப்பில் வதந்தி.. தருவீங்களா, மாட்டீங்களா.. மகளிர் உரிமைத்தொகை கேட்டு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
கோவை: மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம் என்று வாட்ஸ்அப்பில் பரவி வரும் போலியான தகவலை நம்பி, மகளிர் உரிமைத் தொகை தரக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டை வைத்துள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் அரசு சார்பில் செலுத்தப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை தற்போது 1 கோடியே 15 லட்சம் பேர் பெற்று பயனடைந்து வருகின்றனர்.

தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் புதிதாக குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜூலை 15ம் தேதி நிலவரப்படி புதிதாக 1 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது. மகளிர் உரிமைத் திட்டத்திற்கென 2023 - 2024ம் நிதியாண்டில் 8 ஆயிரத்து 123.83 கோடி ரூபாயும், 2024-25 ம் நிதியாண்டில் 13 ஆயிரத்து 722.47 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 1.15 கோடிக்கும் அதிகமானோர் கலைஞர் மகளிர் உரிமை தொகை தற்போது பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்கப் பெறாதவர்கள், புதிதாக குடும்ப அட்டையைப் பெற்றவர்கள் உள்ளிட்டோர் மகளிர் உரிமைத் தொகைக்கு மீண்டும் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு எப்போது வரும் என்று காத்திருக்கின்றனர். இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை தொடர்பான சில போலி தகவல்கள் வாட்ஸ்அப்பில் பரவி வருவதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
அந்த தகவலில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 17, 19, 20 ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. எனவே, மகளிர் உரிமைத் தொகை ரூ, 1,000 பெறுவதற்கான மனுக்களை உடனடியாக கொடுக்கவும். உடனே அனைவருக்கும் கிடைக்கும் என்ற தகவலை பரப்பி வருகின்றனர். இதனை நம்பி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் சனிக்கிழமை காலை குவிந்தனர்.
இதுகுறித்து அப்பெண்கள் கூறுகையில், மகளிர் உரிமைத் தொகைக்காக பலமுறை விண்ணப்பித்தும் இதுவரை எங்களுக்குப் பணம் கிடைக்கவில்லை. இந்த சிறப்பு முகாமில் பணம் கிடைக்கும் என்று நம்பித்தான் வந்தோம் என்றனர். இதையடுத்து, முகாம் எதுவும் நடக்கவில்லை என்று கூறி ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் அவர்களை அனுப்பி வைத்தனர். இதுபோன்று தகவல் மற்ற மாவட்டங்களிலும் பரவி வந்த நிலையில், தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. பரவுவது போலியான தகவல் என்றும், யாரும் நம்ப வேண்டாம் என்றும் விளக்கம் அளித்துள்ளது. திருவாரூர் மாவட்டத்திலும் போலி தகவல் பரவிய நிலையில், தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications