சிக்கன் வேகல.. 1000 ரூபா கொடுத்துட்டு கெஞ்சிட்டு இருக்கணுமா? கோவை கொங்கு உணவுத் திருவிழாவில் தகராறு!
கோவை: கோவையில் நேற்று இரவு நடைபெற்ற கொங்கு உணவுத் திருவிழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது. உணவுத் திருவிழா ஏற்பாட்டாளர்கள் சரிவர ஏற்பாடு செய்யாமல் பல கோடி ரூபாய் வசூல் செய்துவிட்டு, மோசடி செய்துவிட்டதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் தமிழ்நாடு கேட்டரர்ஸ் சங்கம் சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் கொங்கு திருமண உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நேற்று (சனிக்கிழமை) மாலை தொடங்கியது. இந்த உணவுத் திருவிழாவில், தமிழகம் முழுவதும் 1000 க்கும் மேற்பட்ட கேட்டரிங் நிறுவனங்கள் பங்கேற்றன.

இந்த உணவுத் திருவிழாவில் பங்கேற்க பெரியவர்களுக்கு 799 ரூபாய், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர்களுக்கு 499 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் டிக்கெட் வாங்கி உள்ளே வந்து விட்டால் அன்லிமிடெட் முறையில் சாப்பிடலாம் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.
முதல் நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் இந்த உணவு திருவிழாவிற்கு குடும்பத்துடன் வருகை புரிந்தனர். நேற்று அதிகளவிலான கூட்டம் காணப்பட்ட நிலையில் உணவு பரிமாறும் இடத்தில் பொதுமக்களிடையே மோதல் ஏற்பட்டது. உணவு வாங்கும்போது, சில இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ளது. அப்போது சிலர் அவமரியாதையாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
35,000 கோடி ஏமாத்திட்டாங்க..
— Oneindia Tamil (@thatsTamil) December 1, 2024
கோயமுத்தூர் விழாவின் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் கொங்கு திருமண உணவு திருவிழா மற்றும் கண்காட்சியில் நடந்த தகராறு#கோவை #Coimbatore #foodfestival #kongufoodfestival #Covai pic.twitter.com/jbOPWmD9gZ
இந்த உணவுத் திருவிழாவில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனவும் எந்த உணவு கேட்டாலும் இல்லை என்று கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் உணவை வாங்க மணிக் கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டி இருப்பதாகவும் இங்கு தரும் பணத்திற்கு ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டிருக்கலாம் என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும், உணவும் பாதி வெந்தும் வேகாமலும் ருசியில்லாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 1000 ரூபாய் காசு கொடுத்துவிட்டு, இவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டுமா என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 1000 பேர் சாப்பிட வேண்டிய இடத்தில் 10,000 பேரை கூப்பிட்டு வைத்து இப்படி அலைக்கழித்துள்ளனர் என அங்கு சென்ற பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுகள் சரியாக வேகவில்லை என்றும், கொடுத்த பணம் வீண் தான் என்றும் பலரும் குற்றம்சாட்டி உள்ளனர். உணவுத் திருவிழா ஏற்பாட்டாளர்கள் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து பேசும் இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications