மஞ்ச தண்ணி தெளிச்சு.. வேப்பிலை கட்டி விட்டு.. அடேய் கொரோனா.. கோயம்பத்தூர் பக்கம் வந்து பாருடா!
கோவை பஸ்களில் வேப்பிலைகள், மஞ்சள் கட்டப்பட்டுள்ளன
கோவை: "கோயமுத்தூர்க்காரன்னா என்னான்னுடா நெனச்சீங்க?" என்ற ரேஞ்சுக்கு கொரோனா கொண்டு வந்துவிட்டுவிட்டது.. மாநகர பஸ்கள் எல்லாம் மஞ்சள் தெளிக்கப்பட்டு, வேப்பிலை கட்டப்பட்டு ஓடிக் கொண்டிருக்கின்றன!
Recommended Video
அன்றைய காலங்களில், அதாவது மருத்துவ வசதி குறைவான காலகட்டங்களில் நம் மக்கள் கிருமிநாசினிகளை இயற்கை முறையில் பயன்படுத்தி வந்தனர்... வீட்டு வாயில்கள் முன்பு வேப்பிலையை கட்டி... வாசல்களில் மாட்டு சாணம் கொண்டு தெளித்து.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.. வேப்பிலையை போலவே மஞ்சளும் சரியான கிருமிநாசினி.. இவைகளை முன்னெச்சரிக்கை என்றுகூட அவர்கள் நினைத்து செய்தது இல்லை.. வெகு இயல்பாகவே இத்தகைய தடுப்பு நடவடிக்கையை நம் முன்னோர்கள் கையாண்டு வந்தனர்.. ஆரோக்கியமும் தழைத்தோங்கியது!
சமீபகாலமாக புது புது நோய்கள் பெருக்கெடுத்து வரும் நிலையில், அன்றைய இயற்கை முறையையே மக்கள் மீண்டும் கையில் எடுத்துள்ளனர்... கொரோனாவில் இருந்து தப்பிக்க மஞ்சள், பூண்டு, வேப்பிலை கலந்து இயற்கை முறையில் கிருமிநாசினி தயார் அதனையும் கடைகள், பஸ் ஸ்டாண்டுகளில் தெளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது... எனினும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இவைகள் மூலம் மட்டுமே தப்பிவிடலாம் என அறிவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
தற்போது கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் தலைதூக்கி உள்ளது.. தமிழகத்திலும் கலக்கத்தின் அளவு அதிகரித்து வருகிறது.. உச்சக்கட்ட முன்னெச்சரிக்கையில் தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதியாகதான் யாரும் தேவையில்லாமல் பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.. மேட்டுப்பாளையம் பகுதிகளில் மக்கள் இயற்கை கிருமி நாசினியான மஞ்சள், வேப்பிலை கலந்த நீரை ஊர் முழுவதும் தெளித்து வருகின்றனர்.
எல்லா வீடுகளிலும் பெண்கள் இந்த நீரை தெளித்து வருவது மற்ற கிராம மக்களையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது. அதனால் பெரும்பாலான பஸ்களில் மக்கள் கூட்டம் குறைவாகவே உள்ளது.. அதற்காக பஸ்களை முழுசுமாக இயக்காமல் இருக்க முடியாது.. குறைவான பயணிகளே இருந்தாலும் பஸ்கள் வழக்கம்போல்தான் இயக்கப்பட்டு வருகிறது!
ஆனால் கோவை மாவட்டத்தில் இயக்கப்படும் பஸ் ஒன்றில் புதிதாக வேப்பிலைகள் கட்டப்பட்டுள்ளன.. படிக்கட்டுகளுக்கு மஞ்சள் வைக்கப்பட்டுள்ளன.. ஒவ்வொரு படிக்கட்டிலும் மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டுள்ளன.. வேப்பிலைகளை பஸ்ஸின் ஒவ்வொரு ஜன்னலிலும் கொத்து கொத்தாக கட்டி தொங்கவிட்டுள்ளனர்.. பஸ்ஸின் பின்னாடி, முன்னாடி, கைப்பிடிகளையும் விட்டு வைக்காமல் வேப்பிலைகளை செருகி விட்டிருக்கிறார்கள்... மாரியம்மன் கோயிலுக்கு காணிக்கை செலுத்த வேன், வண்டிகளில் போவார்களே... அதுபோலவே இருக்கின்றன இந்த மாநகர பஸ்!
பஸ்ஸுக்கு உள்ளேயும் விட்டுவைக்கவில்லை நம்ம ஆட்கள்.. திருக்குறள் எழுதி வைத்திருப்பார்களே.. அந்த இடத்திலும் வேப்பிலை கொத்துகள் பயணிகளை வரவேற்கிறது.. ஒவ்வொரு சீட்களிலும், கம்பிகளிலும், ஏன் பஸ்ஸின் மேற்பரப்பிலும் வேப்பிலை தோரணங்கள் உள்ளன... இவைகள் வீடியோ, போட்டோக்களாக பொதுமக்கள் எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர்... ஒருபுறம் இதை நெட்டிசன்கள் கலாய்த்தாலும், மறுபுறம், வேப்பிலை, மஞ்சள் என்று பாரம்பரியத்துக்குத் திரும்புகிறது என்று பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. தற்போது இணையத்தில் வேப்பிலை கொத்து + மஞ்சள் வாடையுடன் மங்கலகரமாக இந்த பஸ் வலம் வருகிறது!!