தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீங்க! பல்லக்கு தடையை நீக்குங்க! பேரூர் ஆதீனம் வலியுறுத்தல்
கோவை: தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு விதித்துள்ள தடையை அரசு நீக்குவதோடு, தேவையில்லாத விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது என கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் வலியுறுத்தியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீன மடம் உள்ளது. பழமையான சைவ ஆதீனமான இங்கு 27 வது ஆதீன கர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார்.
இவர் 2019ல் பதவியேற்றபோது மனிதனை மனிதர்களே தூக்கும் பட்டி பிரவேச நிகழ்ச்சி நடந்தது. வெள்ளிப்பல்லக்கில் ஆதீன கர்த்தர் அமர்ந்து இருக்க மக்கள் அவரை சுமந்து வந்தனர்.

பல்லக்கு தூக்க தடை
அதன்பிறகு வைத்தீஸ்வரன் கோவில், காரைக்கால் திருநள்ளார் சனிபகவான் கோவிலும் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு திராவிடர் கழகம் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு தடை விதித்து கோட்டாச்சியார் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

பேரூர் ஆதீனம் கண்டனம்
இதற்கு பல்வேறு ஆதீனங்கள், இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தடை விதிக்கப்பட்டதற்கு கோவை பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

அடிமை முறை இல்லை
நமது சமயம் மிக தொன்மையானது. ஏராளமான சம்பிரதாயங்களை கொண்டது. குறிப்பாக சைவ சமயத்தில் பெருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. கோவில்களை போல் ஆதினங்களிலும், மடங்களிலும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சி காலம் காலமாக நடைபெற்று வருகிறது. இது மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அங்கு இது நீண்டகாலம் பின்பற்றப்பட்டு வரும் நெறிமுறையாகும். இதில் கொத்தடிமை முறையோ, ஆண்டாள் அடிமை முறையோ, மக்களை துன்புறுத்தும் முறையோ ஏதும் இல்லாமல் ‛குருவே சிவம்' என சீடர்கள் சுற்றி வருகின்றனர். இது மரபு. இதற்கு தடை விதித்திருப்பது பெரும் வருத்தத்திற்குறியது.

தடையை நீக்குங்க
இதனால் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு தடையை நீக்க வேண்டும். இதுபோன்று இருக்ககூடிய தேவையில்லாத விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது. நமது நாடு மதச்சார்பற்ற நாடாக உள்ள நிலையில் இந்து சமயத்திற்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்திருக்கின்றோம். இதை மாற்ற வேண்டும். இத்தகைய நெறிமுறைகள் இருந்தால் ஆதீனங்கள், மடாதிபதிகளை அழைத்து ஆலோசித்து முடிவுகள் எடுக்க வேண்டும். அடியார்கள் போன்றோரின் கருத்து அடிப்படையில் தடை செய்ய கூடாது. தற்போது அறிவித்த தடையை ரத்து செய்ய வேண்டும்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications