நிதி ஒதுக்க மறுக்கும் விவகாரத்தில்.. மத்திய அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் - சிபிஎம் சண்முகம் ஆவேசம்
கோவை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்க மறுக்கும் விவகாரத்தில் ஒன்றிய அரசாங்கத்திற்கு பாடம் புகட்டுகிற வகையில் தமிழ்நாடு கிளர்ந்து எழுந்தது என்று சொல்லக்கூடிய அளவுக்கு பெரிய போராட்டத்திற்கான அறிவிப்பை திமுக உடனடியாக வெளியிட வேண்டும் என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
கோவை ராஜவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி சார்பில் அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேசியதாவது: தமிழ்நாட்டிற்கு பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வழங்க முடியாது என்று சொல்வது சட்டவிரோதமானது. இது வன்கொடுமைக்கு ஈடான ஒரு செயல். இந்தி பேசாத மாநிலங்கள் விரும்புகிற வரை இந்தி மொழி திணிக்கப்படாது என்கிற வாக்குறுதியை இந்திய பாராளுமன்றம் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கி இருக்கிறது.

ஒருவேளை அந்த வரலாறு எல்லாம் இப்போது இருக்கக்கூடிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தெரியவில்லை என்று சொன்னால் அதைத் தேடிப் படிக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால், நிதியை தர முடியாது என்று மத்திய அமைச்சர் சொன்னது என்பது வன்மையாக கண்டனத்திற்குரியது. இதற்கு எதிராக சென்னையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் மீண்டும் ஒரு கடிதத்தை எழுதி இருக்கின்றார். அதில் தமிழ்நாட்டு மாணவர்கள் மீதும், மக்கள் மீதும் மிகப்பெரிய அக்கறை இருப்பதைப் போல எழுதி இருக்கின்றார். இந்த பிரச்சனையை அரசியலாக்காதீர்கள் என வேண்டுகோளோடு மத்திய அமைச்சர் கடிதம் அனுப்பி இருக்கிறார். இதை யார் அரசியல் ஆக்கினார்கள்?. பிஜேபி அரசாங்கம் அரசியல் ஆக்கியதா? தமிழ்நாடு அரசு அரசியலாக்கியதா? என கேள்வி எழுப்பினார்.
இவ்வளவு காலமும் கல்வி நிதி வந்து கொண்டு தான் இருந்தது, கல்விக்கு நிதி கொடுக்க முடியாது என கூறி மக்கள் மத்தியில் கொந்தளிப்பான ஒரு பிரச்சினையாக மாற்றியதற்கு யார் காரணம், ஒன்றிய பிஜேபி அரசாங்கம்தான் காரணம். நாங்கள் சொல்வதைக் கேட்டுதான் தீர வேண்டும் என மத்திய அரசாங்கம் சொல்வதற்கு இந்திய அரசியல் சாசனம் அப்படிப்பட்ட அதிகாரம் எதையும் அவர்களுக்கு வழங்கவில்லை.
இது மத்திய அமைச்சருக்கும், அண்ணாமலைக்கும் தெரியும். தமிழ்நாட்டு மாணவர்களுடைய கல்வி வாய்ப்பை பறிக்க வேண்டும், சரிவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு திட்டமிட்டு தான் இந்த நிதியை தர மாட்டோம் என்று பிடிவாதமாக மறுத்துக் கொண்டிருக்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.
தமிழ்நாட்டிலே இவ்வளவு பெரிய எதிர்ப்பு வந்ததற்கு பிறகு இன்றைக்கு ஒரு கடிதத்தை மத்திய அமைச்சர் அனுப்புகிறார் என்றால், மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டு அரசாங்கத்தோடும், தமிழ்நாடு மக்களோடும் ஒரு மூர்க்கத்தனமான மோதலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என அர்த்தம். இந்த சூழ்நிலையில் ஒன்றிய அரசாங்கத்திற்கு பாடம் புகட்டுகிற வகையில் தமிழ்நாடு கிளர்ந்து எழுந்தது என்று சொல்லக்கூடிய வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் பெரிய போராட்டத்திற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டிய அவசியம் இருக்கின்றது என்பதை முதல்வருக்கு சுட்டிகாட்ட விரும்புகின்றேன்.
ஒன்றிய பிஜேபி அரசுக்கு எதிராக எவ்வளவு வீரியமிக்க போராட்டத்தை நடத்த முடியுமோ அதற்கான முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகம் ஈடுபட வேண்டும். இந்த பிரச்சனைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய லட்சக்கணக்கான ஊழியர்களை களத்திலே இறக்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக தலைமை தமிழ்நாட்டுக்கு நிதியை பெறும் வகையில் போராட்டத்திற்கு முன் வர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications