வழக்கு போட்டு அதிமுகவை அழித்து விடலாம் என தப்புக்கணக்கு போடாதீர்கள்..சி.வி. சண்முகம் கண்டனம்
கோவை: முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தி வழக்கு போட்டு அதிமுகவை அழித்து விடலாம் என திமுக தப்புக்கணக்கு போடுவதாக சி.வி. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். எஸ்.பி. வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்துவதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கிராமப்புறங்களில் எல்இடி விளக்குகளை மாற்றும் திட்டத்தில் ரூபாய் 500 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று காலை எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சி.விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த போது, ஊத்துக்கோட்டை, மஞ்சக்கரணை என்ற பகுதியில் மருத்துவமனையே கட்டப்படாத நிலையில், வேல்ஸ் கல்லூரி மற்றும் மருத்துவமனை, 250 படுக்கை வசதிகளுடன் 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும், புதிய மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு மருத்துவமனை தகுதியானது எனவும் சான்றிதழ் வழங்கியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் தனியார் மருத்துவக்கல்லூரி அலுவலகங்களிலும் ரெய்டு நடைபெறுகிறது.
'யார்கிட்ட..?’ சைலண்டா பதில் சொன்ன வேலுமணி.. '9 பேர்’.. சான்ஸே இல்ல.. அணிவகுத்த எம்.எல்.ஏக்கள்!
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஏற்கனவே எஸ்பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இரண்டு முறை சோதனை நடத்திய நிலையில், மூன்றாவது முறையாக இன்று காலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
எஸ்.பி வேலுமணி ஆதரவாளர்கள்
இந்த சூழலில் எஸ்.பி .வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையில் சோதனை நடத்துவதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் இன்று காலை அவரது வீட்டின் முன்பு திரளாக கூடினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அங்கிருந்து செல்ல அவர்கள் மறுத்ததுடன் லஞ்ச ஒழிப்பு துறையினரை பணி செய்ய விடாமலும் தடுத்தனர். இதன் காரணமாக அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் வேலுமணி வீட்டின் அருகே போராடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்திய நிலையில் அதை எதிர்த்து போராடிய அம்மன் அர்ஜூனன், அருண்குமார், கந்தசாமி, தாமோதரன் உள்ளிட்ட 6 எம்.எல்.ஏக்களும் கைது செய்யப்பட்டனர்.
பழிவாங்கும் நடவடிக்கை
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை நடத்தப்படுவதற்கு முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகளை அடக்கி ஒடுக்கவே இதுபோன்ற ரெய்டுகள் நடைபெறுவதாகவும் சி.வி. சண்முகம் குற்றம்சாட்டினார். எதிர்கட்சிகளை அழிக்க நினைக்கும் ஆளும் திமுக அரசின் எண்ணம் நிறைவேறாது. அதிமுக முன்னணி தலைவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
முடக்கிய அரசு
தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விட்டனர். அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றாமல் உள்ளனர். அதிமுக ஆட்சிகாலத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு ரத்து செய்திருக்கிறது. பெண்கள் தாலிக்கு வழங்கும் திட்டத்தை நிறுத்தி விட்டனர். அமைச்சர்கள் பலர் உதயநிதியின் ரசிகர்களாக மாறியிருக்கின்றனர்.
விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு
நடைமுறையில் இருந்த திட்டங்களை ரத்து செய்து விட்டனர். அனைத்து பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளது. சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பால்விலை உயர்ந்துள்ளது. கட்டுமான பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. மாத மாதம் மின் கட்டணம் கணக்கெடுக்கப்படும் என்று சொன்னவர்கள் மின்சார கட்டணத்தை உயர்த்தியது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் சி.வி. சண்முகம்.
விஞ்ஞான ரீதியான ஊழல்
பஸ் கட்டணத்தை உயர்த்தி நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தரப்போகிறார் முதல்வர் ஸ்டாலின் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். விஞ்ஞான ரீதியான ஊழலை திமுகவினர் நடத்திக்கொண்டிருக்கின்றனர் என்றும் சி.வி சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.