வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்
கோவை: கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பூண்டி வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை முறையாகப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகமும் கேட்டுக் கொண்டுள்ளது.
கோயம்புத்தூரின் அடையாளமாக தென்கயிலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் எழில் கொஞ்சும் இயற்கைக்கு நடுவே அமைந்துள்ளது இக்கோயில். இந்தக் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரள மாநிலம், கர்நாட மாநிலம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மலை ஏற்றம் செய்ய வருவது வழக்கம்.

இந்தக் கோயிலில் மலையேற ஆண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. சாதாரணமாக உள்ளவர்களால் இந்த மலையில் ஏற முடியாது. நல்ல உடற்தகுதியும், உடல்நலக் கோளாறுகளாலும் இல்லாதவர்களால் மட்டுமே இந்தக் கோயிலில் மலையேற்றம் செய்ய முடியும். கோயில் அடிவாரத்திலிருந்து சுமார் 5.4 கி.மீ தூரமும், 6 ஆயிரம் அடி உயரமும் கொண்ட இந்த வெள்ளையங்கிரி மலை சன்னிதானத்திற்கு பிப்ரவரி 1 முதல் மே 31 ஆம் தேதி வரை பக்தர்கள் மலையேற்றம் செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில், வெள்ளியங்கிரி மலையேற்றம் செல்லும் பக்தர்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
* 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் குழந்தைகள், உயர் ரத்த அழுத்த நோய், இதயநோய் பாதிப்பு, நுரையீரல் நோய், சிறுநீரக கோளாறுகள், சர்க்கரை நோய், வலிப்பு நோய், ரத்த சோகை உள்ளவர்கள் மற்றும் இதர நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மலையேற்ற பயணத்தை மிகவும் அதிக கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும்.
* மலையேற்றத்திற்கு செல்லும் பக்தர்கள் தனியாகச் செல்லாமல் குழுவாகவும், அத்தியாவசியமான பொருள்கள் குடி தண்ணீர் உணவு மற்றும் மருந்து பொருட்களை உடன் எடுத்து செல்ல வேண்டும்.
* மலையேற்ற பகுதியில் குளிர் அதிகமாக இருப்பதால் தேவையான பாதுகாப்பு உடைகள் மற்றும் விரிப்புகள் உடன் எடுத்து செல்ல வேண்டும்.
* மலையேற்றத்திற்கு முன்பு கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ குழுவின் மூலம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருத்துவ
குழுவின் அனுமதி பெற்ற பின்னரே மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.
* பயணத்தின் பொழுது உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு குடிநீர் பருக வேண்டும்.
* மலையேற்றத்தின் போது தலைவலி, நெஞ்சுவலி, தலைசுற்றல், மூச்சுத்திணறல் மற்றும் இதர அசௌகரியங்கள் ஏற்பட்டால் பயணத்தை தொடராமல்
உடனடியாக கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ குழுவினை அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.
பக்தர்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளும் வகையில், போளுவாம்பட்டி வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மலை ஏற்றம் மேற்கொள்வோர் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மலை ஏற்றம் செய்பவர்கள் அடிவாரத்தில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட பகுதி வழியாக மட்டுமே செல்ல வேண்டும் வனவிலங்குகள் நடமாட்டம் மற்றும் அதிக அளவில் பனிமூட்டம் உள்ளதால் வனப்பகுதிக்குள் செல்ல பக்தர்கள் முயற்சிகள் மேற்கொள்ளக் கூடாது. ஒவ்வொரு மலைக்கும் வனப்பணியாளர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு செல்லும் பக்தர்கள் பலர் பல்வேறு உடல் உபாதைகள் காரணமாக உயிரிழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது.
எனவே, மாவட்ட நிர்வாகம் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என வனத்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications