டேக் ஆஃப் ஆகும் கோவை விமான நிலைய விரிவாக்கப் பணி.. மாவட்ட நிர்வாகம் கொடுத்த உறுதி
கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கான பணிகள் முழு வீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விமான நிலைய விரிவாக்கத்துக்கு மீதமுள்ள நிலத்தை இம்மாத இறுதிக்குள் ஆணையத்திடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
கோவை மாவட்டம் தொழில் நகரம், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக தொழில் துறையில் கோவை மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கல்வி, மருத்துவம், ஐடி துறை, தொழில் நிறுவனங்கள், தங்க நகை உற்பத்தி என கோவை மாவட்டம் பல்வேறு துறைகளில் கோலோச்சி வருகிறது.

கோவை மாவட்டத்தின் வளர்ச்சி
நாட்டில் வேகமாக வளரும் இரண்டாம் கட்ட நகரங்களின் பட்டியலிலும் கோவை மாவட்டம் இடம்பெற்றுள்ளதால் மத்திய, மாநில அரசுகள் மாவட்டத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கவனம் செலுத்தி வருகிறது. கோவை விமான நிலைய விரிவாக்கம் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. லட்சக்கணக்கான பயணிகள் கோவை விமான நிலையத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில், மற்ற நகரங்களில் உள்ள விமான நிலையங்களின் வசதிகளை ஒப்பிடும்போது கோவை விமான நிலையத்தில் வசதிகள் மிகக் குறைவாகவே உள்ளன.
கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டால் பல்வேறு வசதிகள் இங்கு கொண்டு வரப்படும். கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலத்தை கையகப்படுத்திக் கொடுக்க தமிழக அரசிடம் விமான நிலைய ஆணையம் கோரியது.இந்நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிலம் ஒப்படைப்பு
காளப்பட்டி கிழக்கு, மேற்கு, நீலாம்பூர், இருகூர், சிங்காநல்லூலூர், உப்பிலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியாருக்குச் சொந்தமான நிலங்களுக்கு இழப்பீடு வழங்கி கையகப்படுத்தி ஆணையத்திடம் நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசின் புறம்போக்கு நிலமும் வழங்கப்பட்டுள்ளது. சில ஏக்கர் நிலங்கள் இன்னும் ஒப்படைக்கப்படாமல் உள்ள நிலையில், இந்த நிலங்களை இம்மாத இறுதிக்குள் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் உறுதி கொடுத்துள்ளது.
2 ஆம் கட்டமாக கூடுதலாக கோரப்பட்ட 12 ஏக்கர் நிலத்துக்கு தமிழக அரசின் நிர்வாக அனுமதி எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், சிறு சிறு பிரச்சனைகள் வருகின்றன. எல்லைக் கற்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் விமான நிலைய விரிவாக்கப் பணிக்கான டெண்டர் கோரப்படும். புதிய வரைபடத்துக்கான இறுதி ஒப்புதல் பெறுவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications