"அண்ணாமலை வேட்பு மனு ஏற்கப்பட்டது ஏன்.." கிளம்பிய சர்ச்சை.. தேர்தல் அதிகாரி தந்த பரபர விளக்கம்
கோவை: கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனுவில் பிழை இருந்தும் அதைத் தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டது தவறானது என்று அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றைய தினத்துடன் நிறைவடைந்த நிலையில், இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது.

கோவையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் நிலையில், அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டதற்கு, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், இந்த எதிர்ப்புகளைத் தாண்டி அண்ணாமலையின் வேட்புமனு ஏற்கப்படுவதாகத் தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
எதிர்ப்பு: இருப்பினும், அண்ணாமலையின் வேட்பு மனு செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என அதிமுக இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது. அதாவது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் போது பத்திரப் பதிவுக்கான முத்திரைத் தாளில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று விதி இருக்கும் நிலையில், அண்ணாமலை நீதிமன்ற முத்திரைத் தாளைப் பயன்படுத்தி இருக்கிறார் என்பதே புகாரும். இந்த முத்திரைத் தாளைப் பயன்படுத்துவதைத் தேர்தல் ஆணையம் அனுமதிப்பதில்லை.
இதனால் அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்கப்பட்டது விதி மீறல் என்றும் அண்ணாமலையின் வேட்பு மனுவைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது. இந்த விவகாரம் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இது குறித்து மாவட்ட தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. அண்ணாமலையின் வேட்புமனு நகலும் வெளியிடப்பட்டுள்ளது.
விளக்கம்:அதாவது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மொத்தம் இரண்டு வேட்புமனு தாக்கல் செய்து இருந்தாராம். அதில் நீதிமன்ற பயன்பாட்டிற்கான பத்திரத்தை வைத்துத் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் அல்லாத பயன்பாட்டிற்கான பத்திரத்தை வைத்துத் தாக்கல் செய்யப்பட்ட மனு மட்டுமே ஏற்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு சர்ச்சை குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி தரப்பில், "அண்ணாமலை 2 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். ஒரு வேட்பு மனுவில் இந்தியன் கோர்ட் ஃபீஸ் பத்திரம் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு நிராகரிக்கப்பட்டது.
மற்றொரு வேட்பு மனுவில் Indian non judicial பத்திரம் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. இரண்டாவது வேட்புமனு சரியாக இருந்ததால் அந்த வேட்பு மனு ஏற்கப்பட்டது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்க மறுப்பு: இருப்பினும், இந்த விளக்கத்தை ஏற்க அதிமுக, நாம் தமிழர் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதாவது நேற்றைய தினமே இந்த ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், அவை இன்று மாலை 5 மணிக்கு மேல் தான் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் இதை ஏற்க முடியாது. அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications