அரசியலில் அண்ணாமலை ஒரு கோமாளி.. அவரை பற்றி கேள்வி கேட்காதீங்க.. கோவையில் கொதித்த செந்தில் பாலாஜி
கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி. அரசியல் கோமாளி குறித்து என்னிடம் கேள்வி கேட்காதீர்கள் என தமிழ்நாட்டின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடுமையாக விமர்சனம் செய்தார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து தமிழக அரசை விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது.
தற்போது கோவை உக்கடத்தில் கார் சிலிண்டர் வெடிப்பு விஷயத்திலும் செந்தில் பாலாஜி-அண்ணாமலை ஆகியோர் வார்த்தை மோதல் நீடித்து வருகிறது. இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

செந்தில் பாலாஜி பேட்டி
இந்நிலையில் தான் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகள் சீரமைப்பு பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். ராமநாதபுரம் 80 அடி சாலையில் சாலை சீரமைப்பு பணிகளை துவக்கி வைத்த பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய கூறியதாவது:

ரூ.210 கோடி மதிப்பில் சாலை பணி
கோவை மாநகரில் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.44 கோடி மதிப்பிலான சாலை பணிகள் முடிவடைந்துள்ளது. ரூ.26 கோடி மதிப்பில் 6 இடங்களில் புதிதாக சாலை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. 140 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் நெடுஞ்சாலை துறையினர் சார்பில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 210 கோடி மதிப்பிலான நிதியில் 117 கி.மீ. சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான சாலைப் பணிகள் முடிவடைந்துள்ளது. வருகின்ற மார்ச் மாதத்திற்குள் விடுபட்ட சாலைகள் புதுப்பிக்கப்படும்.

அதிமுக ஆட்சி மீது குற்றச்சாட்டு
கடந்த ஆட்சியில் பல ஆண்டுகளாக சாலைகள் போடவில்லை. அதனால் சாலைகள் சேதமடைந்துள்ளன. வட கிழக்கு பருவமழை காலத்தில் சாலை பணிகளை செய்யக்டாது என்றில்லை. எல்லா நாளும் மழை பெய்வதில்லை. நிதி வந்து டெண்டர் முடிந்த பின்னர் தான் பணிகளை செய்ய முடியும். மழை பெய்யும் போது சாலை அமைக்கும் பணிகள் நடக்காது.

அரசியல் கோமாளி
கட்சி தலைமைக்கு தெரியாமல் பாஜக மாவட்ட நிர்வாகிகள் எப்படி பந்த் அறிவிக்க முடியும்? கட்சியை சரியான வழிநடத்தும் தலைவர் என்றால் ஏன் ஒப்புதல் இல்லாமல் பந்த் அறிவித்தார்கள் என கேட்டிருக்க வேண்டும். நீதிமன்றத்தில் தனக்கு தொடர்பில்லை என்பது முறையானது அல்ல. அக்கட்சியினருக்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டும். பாஜக மாநிலத் தலைவர் ஒரு அரசியல் கோமாளி. அரசியல் கோமாளி தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம்.

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்
கட்சி தலைமைக்கு தெரியாமல் மாவட்ட நிர்வாகிகள் பந்த் என எப்படி சொல்ல முடியும்? கட்சித் தலைவர் என்ன செய்ய வேண்டும்? கட்சி நிர்வாகிகளிடம் பேசி பந்தை ரத்து செய்ய வேண்டும் என சொல்லியிருக்க வேண்டும். ஒரு இயக்கத்தை வளர்க்க மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஊடகங்கள் மூலம் வளர்க்க நினைப்பது மக்கள் ஏற்காத நடைமுறை. என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை என்னை இன்னும் மேம்படுத்துவதாக எடுத்துக் கொள்கிறேன்.

ஆளுநர் மீது விமர்சனம்
ஆளுநர் கல்லூரி நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது ஏற்புடையது அல்ல. ஆளுநருக்கு எல்லா அதிகாரமும் உள்ளது. கோவை கார் வெடிப்பு தொடர்பாக டிஜிபி, தலைமை செயலாளரை அழைத்து பேசி, அவரே என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை செய்திருக்கலாம். 4 நாட்களுக்கு பிறகு அரசியல் பேச வேண்டும் என ஆளுநர் பேசியுள்ளார். கோவை காவல்துறை இவ்வழக்கை மிகத் திறமையாக கையாண்டுள்ளது.

வானதி மீது அட்டாக்
மாதக்கணக்கில் டெல்லியில் இருக்கும் வானதி சீனிவாசன் எத்தனை நாட்கள் தொகுதியில் இருக்கிறார்?. அவரது தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சிக்கே வானதி வரவில்லை. பாஜகவினர் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை முடித்து வரட்டும். கார் வெடிப்பு சம்பவம் நடந்த பின்னர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் மிக விரைவாக நடவடிக்கை எடுத்ததாக தொழில் முனைவோர் முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்தனர். பாஜகவினர் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது எடுபடாது'' என்றார்.












Click it and Unblock the Notifications