தேர்தல் முடியட்டும்.. ஈரோட்டில் சீமானின் பெரியார் விமர்சனத்தின் பின்னணி...போட்டுடைத்த கொளத்தூர் மணி
கோவை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாள்தோறும் தந்தை பெரியாரை (Seeman Periyar Kolathur Mani) வலிந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து வருவதன் பின்னணியை திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி விவரித்துள்ளார். பெரியாரை விமர்சித்து பேசுவதால் என்ன நடக்கும் என சீமான் எதிர்பார்க்கிறாரோ அது நடக்காது என்றும் கொளத்தூர் தா.செ. மணி தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கூறியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என்ற பெயரில்தான் பொதுவாக எப்போதும் அறிக்கை வெளிவரும். சீமானுக்கு ஆதரவாக தமிழீழ அரசியல்துறை என்ற பெயரில் ஒரு அறிக்கை வெளியானது. அதில் கையெழுத்திட்ட நல்லைய்யா என்பவரை தோழர்கள் தொடர்பு கொண்டு கேட்ட போது, வற்புறுத்தியதால் கையெழுத்திட்டேன்; புலிகள் இயக்கத்தினர் இது தவறு என சுட்டிக்காட்டினர்; விரைவில் மறுப்பு அறிக்கை வெளியிடுவோம் என கூறியுள்ளனர்.

கட்டுநாயக்கா மற்றும் அனுராதபுர விமானப் படை தளங்களின் மீதான விடுதலைப்புலிகளின் தாக்குதலில் கரும்புலிகள் யாரும் உயிருடன் திரும்பியது இல்லை. ஆனால் சீமான், ஒருவர் திரும்பி வந்திருப்பதாக சொன்ன போது சந்தேகம் எழுந்தது. அப்போது ஒளிப்பதிவாளர் சந்தோஷிடம் இது குறித்தும் கேட்டேன். அப்படி யாரும் உயிருடன் திரும்பிவரவில்லை என்றார்.
இருப்பினும் அன்று சீமான் எங்கள் மேடைகளில் பேசிவந்ததை நம்பி நாங்கள் பணம் கொடுத்து ஏமாந்தோம். இப்போது எங்களுக்கு வருகிற சந்தேகம், விடுதலைப் புலி என்று சொல்லி வந்த நபரே அந்த பணத்தை வாங்கிக் கொண்டாரா? அல்லது சீமான் மறைமுகமாக அவர் பெயரில் வாங்கி வைத்துக் கொண்டாரா? என்பதுதான்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடியும் வரை சீமானின் பெரியார் மீதான விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றமாட்டோம். ஈரோட்டில் சீமான் தினமும் பெரியாரை விமர்சித்து பேசுவதற்கு காரணமே, தம் மீது தாக்குதல் நடக்கும்; அதை வைத்து சில அனுதாப ஓட்டுகளைப் பெற்றுவிட முடியும் என்பதால்தான். ஆனால் சீமானின் ஆசையை எமது தோழர்கள் நிறைவேற்றவில்லை.
ஈரோட்டில் அதிமுக, பாஜக போட்டியிடவில்லை. தமது எஜமானாகிய பாஜகவின் ஓட்டுகளை எப்படியாவது பெற்றுவிடலாம் என நினைக்கிறார் சீமான். கோடிக்கணக்கான வாக்குகளைப் பெற்ற திமுக, அதிமுக எங்கே, சில லட்சம் ஓட்டுகளைப் பெற்றுவிட்டு 3-வது கட்சி என்று சொல்லி ஏமாற்றுகிறவர்கள் எங்கே? 3-வது கட்சி என சொல்வதே ஒன்றுமில்லாத கட்சிதான் என்று அர்த்தம். இவ்வாறு கொளத்தூர் மணி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications