அதிமுக - தேமுதிக பேர அரசியல் நடத்துகிறது.. மக்களுக்கு நல்லதல்ல.. கொங்கு மண்டலம் ஈஸ்வரன் தாக்கு
அதிமுக-தேமுதிக கூட்டணி குறித்து கொங்கு மண்டலம் ஈஸ்வரன் சாடியுள்ளார்.
கோவை: ஏதோ வியாபாரத்தில் இடைத்தரகர்கள் செய்யும் வியாபார உத்தியைபோல கூட்டணி பேரத்தை தேமுதிக - அதிமுக 2 கட்சிகளும் மாறிமாறி அரங்கேற்றி வருவது தமிழக அரசியலுக்கும், தமிழக மக்களுக்கும் நல்லதல்ல என்று கொங்கு மண்டல ஈஸ்வரன் எச்சரித்துள்ளார்.
இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லி இருப்பதாவது: "வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளுடன் மற்ற அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்து வரும் நிலையில் தேமுதிகவை கூட்டணியில் கொண்டு வருவதற்கு அதிமுக - தேமுதிக இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதை நாம் அறிவோம்.
"தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க".. பிரேமலதா வந்த பாரம்பரியம் இது!
ஆனால் கடந்த சில நாட்களாக இரு கட்சிகளுக்கு இடையே நடக்கும் நிகழ்வை பார்க்கும் போது தமிழக மக்கள் அனைவரையும் முகம் சுழிக்க வைத்திருக்கிறது. ஏதோ வியாபாரத்தில் இடைத்தரகர்கள் செய்யும் வியாபார உத்தியை போல கூட்டணி பேரத்தை தேமுதிக - அதிமுக இரண்டு கட்சிகளும் மாறிமாறி அரங்கேற்றி வருவது தமிழக அரசியலுக்கும், தமிழக மக்களுக்கும் நல்லதல்ல.
தேமுதிக தங்களுடைய கூட்டணி பேரத்தை அதிகரிக்க என்னென்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் எந்தவொரு கூச்சமும் இல்லாமல் செய்வார்கள் என்பதை கடந்த சில தினங்களாக நடக்கும் நிகழ்வு வெளிக்காட்டியிருக்கிறது. அரசியல் நாகரீகம் துளியும் இல்லாமல் பேர அரசியலை கொண்டு இவ்விரு கட்சிகளும் அமைக்கும் கூட்டணி எப்படி மக்கள் நலம் சார்ந்த கூட்டணியாக இருக்க முடியும்.
தமிழக மக்களுக்கு போதிய அரசியல் விழிப்புணர்வு இல்லை என்று இவ்விரு கட்சிகளும் கருதுகிறார்களா ?. இவ்விரு கட்சிகளும் அமைக்கும் வியாபார அரசியல் கூட்டணிக்கு தேர்தலில் தமிழக மக்கள் தக்க பதிலடியை கொடுக்க தயாராகிவிட்டார்கள் என்பதை மட்டும் புரிந்துக்கொள்ள முடிகிறது" என்று தெரிவித்துள்ளார்.