தொழில்துறை எடுத்த புதிய முடிவு! அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி இது! மார்தட்டும் எடப்பாடி பழனிசாமி!
கோவை: கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் தொழில் பூங்காவுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்ற தொழில்துறையின் அறிவிப்பு அதிமுகவின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விவசாயிகளுக்கு ஆதரவாக என்றென்றும் துணை நிற்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

விடியா அரசு
விடியா அரசு அவினாசி, அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாக்களில் உள்ள 6 ஊராட்சிகளில், சுமார் 3800 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, டிட்கோ சார்பில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று 16.8.2021-ல் அரசாணை வெளியிட்டு, அப்பகுதி வேளாண் மக்களின் தலையில் இடியை இறக்கியது. உடனடியாக, கழக தலைமை நிலையச் செயலாளர் S.P. வேலுமணி, M.L.A., கழகத்தின் சார்பில் வேளாண் நிலங்களில் தொழிற்பேட்டையை அமைத்திட முயலும் இந்த விடியா திமுக அரசைக் கண்டித்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே அறிக்கை வெளியிட்டார்.

தொடர் போராட்டங்கள்
அதன் தொடர்ச்சியாக, 28.11.2022 அன்று ஒதிமலை ரோடு, அன்னூரில் விவசாயப் பெருமக்கள் நடத்திய மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில், எனது அறிவுறுத்தலின் பேரில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், S.P. வேலுமணி, M.L.A., P.R.G. அருண்குமார் M.L.A., ப. தனபால், M.L.A., A.K. செல்வராஜ். M.L.A., அமுல்கந்தசாமி, M.L.A., ஆகியோரும், அப்பகுதியில் உள்ள கழக நிர்வாகிகளும் கலந்துகொண்டு, அரசாணையை ரத்து செய்யாவிட்டால் விவசாயிகளை ஒன்றிணைத்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று விடியா திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துப் பேசினார்கள்.

அரசை எச்சரித்தேன்
மேலும் கழகத்தின் சார்பில், 2.12.2022 அன்று கோவையில் நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் நான் கலந்துகொண்டு பேசியபோது, அவினாசி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தும் இந்த விடியா அரசை கண்டித்துப் பேசினேன். மேலும், தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் முயற்சிகளில் இந்த விடியா அரசு ஈடுபட்டால், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஆதரவாக கழகத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தேன்.

அதிமுகவுக்கு வெற்றி
இதன் தொடர்ச்சியாக, விவசாயிகளின் விருப்பம் இல்லாமல் வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று விடியா திமுக அரசு ஒரு அரசாணையை இந்த வாரம் வெளியிட்டுள்ளது. இது, இப்பகுதி விவசாயப் பெருமக்களின் ஒருங்கிணைந்த போராட்டத்திற்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் கிடைத்த வெற்றியாகும்.

துணை நிற்கும்
விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக, அவர்களது வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் இந்த விடியா அரசு ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்துகிறேன். மேலும், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஆதரவாக என்றென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துணை நிற்கும் என்று மீண்டும் ஒருமுறை உறுதியளிக்கிறேன்.












Click it and Unblock the Notifications