குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை என்ற குற்றசாட்டு.. ஈஷா மறுப்பு!
கோவை: ஈஷா மீதான ஆட்கொணர்வு மனு வழக்குகள் நேற்று முடித்து வைக்கப்பட்டன. இரு பெண்களும் தங்கள் சுய விருப்பத்தின்பேரில் ஈஷா மையத்தில் தங்கி இருப்பதால் அவர்களை மீட்டுத் தர சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை முடித்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. இந்த வழக்கில் ஈஷா நிர்வாகம் நிம்மதியடைந்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில், ஈஷா யோகா மையத்திலுள்ள பள்ளி மீது சிலர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதை ஈஷா மறுத்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பிய, ஆந்திராவின் ராஜமுந்திரியைச் சேர்ந்த ஈஷா அறக்கட்டளையின் முன்னாள் தன்னார்வத் தொண்டர்கள், தம்பதியான சத்ய நரேந்திர ரகானி மற்றும் யாமினி ரகானி ஆகியோர் ஒரு குற்றம் சாட்டி உள்ளனர். அதில், ஈஷா அறக்கட்டளையில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர். ஈஷா அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனங்களில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.
ஈஷா அறக்கட்டளையால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் எந்த முறையையும் பின்பற்றாமல் தன்னிச்சையாக நடத்தப்படுகிறது. ஈஷா ஹோம் ஸ்கூலில் (ஐஎஸ்ஹெச்) சிறுவன் ஒருவன் மூன்று ஆண்டுகளாக எங்கள் மகனை பாலியல் வன்கொடுமை செய்தார். எங்களின் ஆண் குழந்தை மற்றும் எங்களின் நண்பரின் பெண் குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகினர். தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கான ஈஷா அறக்கட்டளையின் குழு உறுப்பினராக நாங்கள் செயல்பட்டு வந்தோம். அப்போது இது நடந்தது.
பள்ளியில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டாலும், அவர்கள் வெளியே சொல்லாமல் அதை மறைத்தனர். 16 வயது சிறுவன் இறந்ததும் கூட அங்கே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பிய தம்பதியான சத்ய நரேந்திர ரகானி மற்றும் யாமினி ரகானி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த புகார் தவறானது, இதில் உண்மை எதுவும் இல்லை. ஈஷா மையம் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று இப்படி வதந்தியை பரப்புகின்றனர் என்று கூறி இந்த செய்திக்கு ஈஷா மையம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஈஷா ஹோம் ஸ்கூல் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி நிர்வாகமும் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications