கோவையையே மிரள வைத்த.. ஐஏஎஸ், ஐபிஎஸ்.. விசாரித்த போலீசுக்கு ஷாக்.. அத்தனையும் போலி!
கோவை: மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட போலி பெண் ஐபிஎஸ் அதிகாரி உள்ளிட்ட 2 பேர் கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை தனியார் நிறுவனத்தின் மேலாளராகப் பணியாற்றி வரும் பெண் ஒருவர் காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், “எங்கள் நிறுவனத்தில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிவமலர் என்பவர் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்தார். அவர் எங்கள் நிறுவனத்தை அரசு பயிற்சி மையமாக மாற்றலாம் என தொடர்ந்து வற்புறுத்தினார். இதற்காக சென்னையைச் சேர்ந்த இந்திரா காந்தி என்பவரை அறிமுகப்படுத்தினார். அவர் மத்திய அரசின் பல பொறுப்புகளில் உள்ளார். விரைவில் இந்தியா முழுவதும் அலுவலகம் தொடங்க உள்ளதாகக் கூறினார்கள்.

அவர்கள் இருவரும் என்னிடம் நயவஞ்சகமாக பேசி மத்திய அரசு பணியில் வேலை வாங்கித் தருகிறோம். அதற்கு என்னுடைய உதவி வேண்டும் என்று கூறினர். அதை நம்பி மத்திய அரசு பணிக்காக, கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 18 பேரிடம் சுமார் ரூ.2 கோடி வரை வசூலித்தனர். இந்திரா காந்தியின் மகள் ரஞ்சினி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று டெல்லியில் மத்திய அரசு பணியில் இருப்பதாகவும், அவர்தான் மத்திய அரசுக்கான பணியில் சேர்த்து விட உதவுகிறார் என்றும் கூறினர்.
மேலும் இந்திரா காந்தியின் உதவியாளரான கவிப்பிரியா என்பவர், சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்றும் கூறினார்கள். அதை நம்பி பலரும் பணம் கொடுத்தனர். சென்னை, கொச்சி, டெல்லி என்று பல இடங்களுக்கு வரச்சொல்லி நேர்முக தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு எல்லாம் நடத்தினார்கள். ஆனால் வேலை கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில் இந்திரா காந்தி சென்னையில் உள்ள வீட்டை மாற்றிவிட்டதாக தகவல் கிடைத்தது. சிவமலரும் என் அலுவலகத்துக்கு வருவதை நிறுத்திவிட்டார். நீண்டகாலம் முயற்சித்தும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒருகட்டத்தில் அவர்களைத் தொடர்பு கொண்டு பணத்தைத் திருப்பி கேட்டதற்கு, 'அதெல்லாம் முடியாது முடிந்ததை செய்' என மிரட்டுகிறார்கள். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கூறப்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. இந்திரா காந்தி தன்னை ஐபிஎஸ் அதிகாரி, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர், விஞ்ஞானி என டிசைன் டிசைனாக பல்வேறு மோசடியில் ஈடுபட்டுள்ளார். ரஞ்சினி ஐஏஎஸ் அதிகாரி என்றும், கவிப்பிரியா லஞ்ச ஒழிப்புத்துறை சப் இன்ஸ்பெக்டர் என்றும், சிவப்பிரியா இவர்களை இணைக்கும் ஏஜென்ட் என்றும் கூறி கூட்டு சதியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்திரா காந்தி மற்றும் கவிப்பிரியாவை கைது செய்துள்ளனர். மேலும், ரஞ்சனி மற்றும் சிவமலர் ஆகியோரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications