பிரபல கானா பாடகி இசைவாணி.. இப்படி பாடினாரா? பா. ரஞ்சித்தையும் விடல.. போலீசுக்கு போன ஐயப்பா பக்தர்கள்
கோவை : பிரபல டைரக்டர் பா.ரஞ்சித் மற்றும் பிக்பாஸ் போட்டியாளரும், கானா பாடகியுமான இசைவாணி மீது போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில், மேட்டுப்பாளையம் போலீசாரும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. என்ன நடந்தது?
தலித் மக்களின் வலிகளை உணர்த்தும்விதமான படங்களை எடுத்து, இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத டைரக்டராக உயர்ந்திருப்பவர் பா.ரஞ்சித்.. இவர் நீலம் பண்பாட்டு மையத்தை (Neelam Cultural Center) வழிநடத்தி வருகிறார்..

சித்தாந்தங்கள்: இவர்களது சித்தாந்தங்கள், இந்த நீலம் பண்பாட்டு மையத்தின் மூலமாக, பல்வேறு நிகழ்ச்சியாக மக்களின் பார்வைக்கு கொண்டுசெல்லப்பட்டு வருகிறது.. அதனால், இந்த நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடக்கும் நிகழ்வுகளிலும் டைரக்டர் ரஞ்சித் அவ்வப்போது பங்கேற்பார்.
இந்நிலையில், நீலம் பண்பாட்டு நிகழ்ச்சியில், பிரபல கானா பாடகி இசைவாணி, "ஐ ஆம் சாரி ஐயப்பா" என்ற பாட்டை பாடியிருந்தார்.. இந்த பாடலை கேட்டதுமே, ஐயப்ப பக்தர்கள் கடும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்தனர்.. கடவுள் நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதமாகவும், ஐயப்ப விரதம் உட்பட பல விஷயங்களை அவதூறு செய்யும் நோக்கத்துடனும் இந்த பாடல் பாடப்பட்டிருப்பதாக, ஐயப்ப பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.
இசைவாணி: இதையடுத்து, சோஷியல் மீடியாவில் இசைவாணிக்கு எதிரான கண்டனங்களும், எதிர்ப்புகளும் பதிவாக துவங்கியது.. இந்த பாடல், கடந்த 2019ல் வெளியானதாக தெரிகிறது.. ஆனால், இப்போது ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து சபரிமலை செல்லும் நேரத்தில், மீண்டும் இந்த சர்ச்சை கிளம்பியிருக்கிறது.
தெலுங்கு மக்களை அவதூறாக பேசிய கஸ்தூரியை கைது செய்திருந்த, இசைவாணி மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் மீதும் நடவடிக்கை என்றும், கஸ்தூரிக்கு ஒரு நியாயம், இவர்களுக்கு ஒரு நியாயமா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்..
கஸ்தூரி: கஸ்தூரியை கைது செய்த தமிழக அரசு, ஐயப்பனை பக்தியோடு விரதம் இருந்து வரும் பக்தர்களின் மனதை புண்படுத்தக் கூடிய வகையில் செயல்பட்ட இசைவாணியை கைது செய்யுமா? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
இதனிடையே, ஐயப்ப பக்தர்கள் குறித்து இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பாடல் பாடியதாக கானா இசைவாணி, இயக்குனர் பா. ரஞ்சித் ஆகியோருக்கு எதிராக கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்துக்கள்: அனைத்து ஐயப்பன் பக்தர்கள் சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் செல்வகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் இந்த புகார் மனுவை தந்துள்ளனர்.. அதில், "இந்துக்கள் மிக முக்கியமான தெய்வமாக வணங்கும் கடவுளான ஐயப்ப சுவாமி மீதும், அவருக்கு பக்தர்கள் நாங்கள் மேற்கொள்ளும் விரதங்கள் குறித்து கொச்சைப்படுத்தும் வகையில், கானா பாடகி இசைவாணி மற்றும்நீலம் கலாச்சார நிர்வாகம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
எனவே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனங்களை புண்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட கானா பாடகி இசைவாணி, நீலம் கலாச்சார நிர்வாகத்தினரான இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது..
பரபரப்பு: இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த நீலம் பண்பாட்டு மையம் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐயப்ப பக்தர்களின் சங்கத்தினர் புகார் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகாரின் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications