கூலி படத்திற்கு குழந்தைகளுடன் சென்ற பெற்றோர்.. தடுத்த கோவை திரையரங்கம்.. ரணகளமான பிரபல மால்
கோவை: ரஜினி நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் கூலி படம் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் கூலி படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதால் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில் கோவையில் பிரபல மாலில் உள்ள திரையரங்கிற்கு குழந்தைகளுடன் சிலர் கூலி படத்திற்கு சென்றுள்ளனர். திரையங்க நிர்வாகம் அனுமதி மறுத்ததால், படம் பார்க்க சென்றவர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், அமீர்கான், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான கூலி படம் நேற்று வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேநேரத்தில் தொடர் விடுமுறை காரணமாக வசூலில் சாதனை படைத்து வருகிறது.

முதல் நாளில் கூலி படம் உலகம் முழுவதும் ரூ.151 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் கூலி படைத்திருக்கிறது. பல பகுதிகளிலும் வசூலில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.
கூலி A சான்றிதழ்
பொதுவாக ஒவ்வொரு திரைப்படத்திற்கும், அதன் கதை, காட்சிகள், வசனங்கள் ஆகியவற்றை பொறுத்து தணிக்கை செய்து சான்றிதழ் வழங்குவார்கள். அந்த வகையில் கூலி படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விதிகள்படி A சான்றிதழ் வழங்கப்பட்ட படங்களுக்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்குவார்கள். 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களை திரையரங்கில் அனுமதிக்க மாட்டார்கள்.
இதை ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போதே எச்சரிக்கையாக அறிவிப்பாக காட்டுவார்கள். அதையும் மீறி திரையரங்கங்களில் குழந்தைகளை அனுமதிப்பதாக புகார் உள்ளது. அதேபோல கூலி படத்திற்கும் ஆங்காங்கே சில திரையரங்குகளில் விதிகளை மீறி குழந்தைகளை அனுமதிப்பதாக வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதனால் திரையரங்குகளில் கண்காணிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
குழந்தைகளுக்கு அனுமதி மறுப்பு
விடுமுறை தினம் என்பதால், கூலி படத்திற்கான டிக்கெட்கள் பெரும்பாலும் நேற்றே விற்று தீர்ந்துவிட்டன. கோவை புரோசோன் மால் ஐ-நாக்ஸ் திரையரங்கிற்கு இன்று சிலர் குழந்தைகளுடன் திரையரங்கிற்கு சென்றுள்ளனர். 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களை, திரையரங்கு அனுமதி மறுத்தனர். இதனால் படம் பார்க்க வந்தவர்கள், திரையரங்கு நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒருகட்டத்தில் மக்கள், டிக்கெட்டுக்கான தொகையை திரும்பி வழங்குமாறு கேட்டனர். ஆனால் அவர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ததால், பணத்தை திருப்பி வழங்க முடியாது என்று கூறிவிட்டனர். நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்த ஆன்லைன் நிறுவனம் மூலம் பணத்தை திரும்பப் பெறலாம் என்றும் அறிவுறுத்தினார்கள். இதை ஏற்க முடியாமல் மக்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்தார்கள்.
கவனம் மக்களே
சம்பவ இடத்திற்கு சென்ற சரவணம்பட்டி காவல்துறையினர் அவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.'கூலி' படத்திற்கு 'A' சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதால், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை என்று முக்கிய திரையரங்கு நிர்வாகிகள் ஏற்கனவே அறிவித்திருந்தன.
இந்த அறிவிப்புகளை சரியாக கவனிக்காமல் மக்கள் டிக்கெட் முன் பதிவு செய்து விடுகிறார்கள். எனவே ரசிகர்கள் டிக்கெட் முன்பு பதிவு செய்யும்போது, அதுதொடர்பான விபரங்களை சரியாக கவனிக்க வேண்டும். என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications