கோவை எல்லன் மருத்துவனையை அபகரிக்க முயன்ற விவகாரத்தில் திருப்பம்! டாக்டர் ராமசந்திரன் உட்பட ஐவர் கைது
கோவை: கோவையில் எல்லன் மருத்துவமனையை அபகரிக்க முயன்ற விவகாரத்தில், முக்கிய திருப்பம் அரங்கேறி உள்ளது.
கோவை காந்திபுரத்தில் எல்லன் மருத்துவமனை சுமார் 50 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது. இதனைக் கோவையைச் சேர்ந்த பிரபல ராமச்சந்திரன் என்ற மருத்துவர் நிர்வகித்து வந்தார்.
இவர் சென்னை சேர்ந்த உமாசங்கர்(54) என்ற மருத்துவருக்கு எல்லன் மருத்துவமனையை வாடகைக்குக் கொடுத்து இருந்தார்.

எல்லன் மருத்துவமனை
வாடகைக்கு எடுத்த பின்னர், எல்லன் மருத்துவமனை என்ற பெயரை உமாசங்கர் சென்னை மருத்துவமனை என மாற்றிக் கொண்டார். தொடக்கத்தில் இருவருக்கும் இடையே எந்தவொரு பிரச்சினையும் இல்லாமலேயே இருந்துள்ளது. மாத வாடகையாக 15 லட்சமும் அதற்கான வரியும் உமாசங்கர் செலுத்த வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், கடந்த 2017 முதல் அவர் வாடகையை முறையாகச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

வாடகை
இதனிடையே ஜிஎஸ்டி முறையும் அமலுக்கு வந்த நிலையில், உமாசங்கர் வாடகை கொடுக்காததால் ஜிஎஸ்டி தொகையை ராமசந்திரனே கட்டும் சூழல் ஏற்பட்டது. எல்லாம் சேர்த்து சுமார் ரூ 4.95 கோடியைத் தருமாறு உமாசங்கரிடம் ராமசந்திரன் கேட்டுள்ளார். அந்தத் தொகையையும் உமாசங்கர் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அவர் மருத்துவமனையை வேறு ஒரு நபருக்கு உள்வாடகைக்கும் கொடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

வழக்கு
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ராமசந்திரன், இது குறித்து உமாசங்கரிடமும் கேட்டுள்ளார். அப்போது உமாசங்கர் தனது மேலாளர் மருதவாணன் என்பவருடன் சேர்ந்து ராமசந்தினரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகக் கோவை மாநகர் குற்றப்பிரிவில் மருத்துவர் ராமச்சந்திரன் அளித்த புகாரின் பெயரில், உமாசங்கர் மற்றும் அவரது மேலாளர் மருதவாணன் ஆகியோர் மீது கொலை மிரட்டல், மோசடி உட்பட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இருவரும் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர்.

மரணம்
அப்போது ஜாமீனில் வெளியே வந்த டாக்டர் உமாசங்கர், கடந்த 2021 ஜனவரி 23இல் கண்ணப்பநகர் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது, பின்னால் வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலே பலியானார். இந்தச் சம்பவம் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் எல்லன் மருத்துவமனை உரிமையாளரான ராமச்சந்திரன் மீது சந்தேகம் எழுந்தது.

கைது
சமீபத்தில் தான் சிபிசிஐடி போலீசார் ராமசந்திரனிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் வரும் நாட்களில் பல பரபர தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிபிசிஐடி போலீசார் டாக்டர் ராமச்சந்திரன் உட்பட 5 பேரை (காமராஜ், மூர்த்தி, உதவியாளர் முருகேஷ், கார் ஓட்டுநர் பழனிசாமி) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம், வரும் 27 ஆம் தேதி வரை அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இவர்கள் மீது மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications