ஏஐ கேமரா ரெடி.. இனி ஜிடி நாயுடு மேம்பாலத்தில் ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது
கோவை: கோவையின் அடையாளங்களில் ஒன்றாக அவிநாசி சாலை ஜிடி நாயுடு மேம்பாலம் வந்துள்ளது. இதன் மூலம் மக்களுக்கு அதிக பயன்பாடு இருந்தாலும், மேம்பாலத்தில் அதிவேகமாக பயணிப்பது பிரச்சனையாக மாறி வருகிறது. இதை சரி செய்ய ஏஐ தொழில்நுட்பத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி முடிந்துள்ளது. இது செயல்படும் விதம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து வேகமாக முன்னேறும் மாவட்டமாக கோவை உள்ளது. கல்வி, மருத்துவம், தொழில்துறை, ஐடி, உற்பத்தி உள்ளிட்ட பல பிரிவுகளில் கோவை வளர்ச்சியடைந்து வருகிறது. கோவையின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும் என்று பல வருடங்களாக கோவை மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

கோவை போக்குவரத்து
தினசரி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து மக்கள் கோவை வருகிறார்கள். கல்வி, வேலை, தொழில் நிமித்தாகவும் பலர் கோவைக்கு வருகிறார்கள். கோவை மாநகர மக்கள் தொகை மட்டுமே 20 லட்சத்தை கடந்துவிட்டது. போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் இருந்து பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
கோவையின் இதயபகுதியில் ஒன்றாக அவிநாசி சாலை உள்ளது. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஐடி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் அங்கு அதிகம் இயங்குகின்றன. திருப்பூர், ஈரோடு, சேலம், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு சாலைகளை இணைக்கும் பகுதியாக அவிநாசி சாலை உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் அங்கு மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.
ஜிடி நாயுடு மேம்பாலம்
சுமார் 5 வருடங்களாக பணிகள் நடைபெற்று வந்தன. 10.10 கிமீ தொலைவுக்கு கட்டப்பட்டு வந்த அந்த மேம்பாலத்தை கடந்த 2025 நவம்பர் மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். மேம்பாலத்திற்கு ஜி.டி நாயுடு மேம்பாலம் என்று பெயர் சூட்டப்பட்டது. மேம்பாலம் திறக்கப்பட்ட நிலையில் அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு குறைந்துள்ளது.
ஆனால் மேம்பாலத்தில் அதிவேகமாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஆங்காங்கே சின்ன சின்ன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மேம்பாலத்தில் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக, கேமரா பொருத்தும் பணிகள் நடந்தன. ஏ.ஐ தொழில்நுட்பத்தில் சுமார் 44 கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வந்தது.
வந்துவிட்டது ஏஐ கேமரா
புதிய விதிகள்படி மேம்பாலத்தில் 60 கிமீ வேகத்தில் மட்டுமே வாகனங்கள் இயக்க வேண்டும். மேம்பாலத்தின் ஏறுதளம் மற்றும் இறங்குதளங்களில் 30-40 கிமீ வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும். கேமராக்களின் செயல்பாடு குறித்து கடந்த ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில் நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை பரிசோதனை நடத்தினார்கள்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "அதிவேகம், ஹெல்மெட் அணியாதது, சீட் பெல்ட் அணியாமல் செல்வது உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட விதிமீறல்கள் ஏஐ கேமராக்கள் மூலம் கண்டறியப்படும். வாகன எண், விதிமுறை மீறல் விபரங்களை மேம்பாலத்தில் உள்ள தகவல் பலகையில் காட்டப்படும்.
பரிசோதனை
இவற்றை கண்காணிப்பதற்கான கட்டுப்பாட்டு மையம் பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. ஏஐ தொழில்நுட்பத்தில் விதிமுறை, கண்காணிப்பு சார்ந்த தகவல்களை உள்ளீடு செய்து வருகிறோம். இவற்றை அடுத்த ஒரு மாதம் பரிசோதனை செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம்" என்றனர்.














Click it and Unblock the Notifications