கோவையில் 13 வயது சிறுமியின் வயிற்றில் அரை கிலோ முடி.. காலி ஷாம்பூ பாக்கெட்டுகள்
கோவை: கோவையில் 13 வயது சிறுமியின் வயிற்றில் அரை கிலோ தலை முடி மற்றும் காலி ஷாம்பூ பாக்கெட்டுகளை மருத்துவர்கள் அகற்றினர்.
அப்போதெல்லாம் வயிற்றில் கட்டி இருக்கும், அதை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் எடுப்பர். ஆனால் இப்போதெல்லாம் முடி, காயின், பல்பு என வித்தியாசமான பொருட்களை சாப்பிடுகின்றனர்.
வெளிநாட்டில் ஒரு பெண் முகத்துக்கு பூசும் பவுடரை டப்பா டப்பாவாக உட்கொள்ளும் செய்திகள் வெளியாகின. இதற்கு காரணம் ஒரு பொருள் மீதான ஈர்ப்பே ஆகும். குழந்தைகள் மண்ணை அள்ளி சாப்பிடுவதையும் பார்த்துள்ளோம். அது போல் பெரியவர்கள் கூட மண்ணை அள்ளி சாப்பிடுவதை கேள்விப்பட்டுள்ளோம்.
ஆனால் கோவையில் 13 வயது சிறுமி ஒருவர் முடியையும் காலி ஷாம்பூ பாக்கெட்டுகளையும் சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி திடீரென ஒரு நாள் வயிற்று வலி என கூறிக் கொண்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அழைத்து சென்றனர்.
அப்போது மருத்துவர்கள் சில மாத்திரைகளை கொடுத்துள்ளனர். அப்போதும் அவரது வயிற்று வலி சரியாகாததால் உடனே மீண்டும் அந்த மருத்துவரை சந்தித்தனர். அப்போது ஸ்கேன் எடுத்து வருமாறு மருத்துவர்கள் அனுப்பினார்.
ஸ்கேன் ரிப்போர்ட்டில் அந்த சிறுமியின் வயிற்றில் ஏதோ பந்து போன்ற பொருள் இருப்பதை அறிந்தனர். இதையடுத்து அந்த சிறுமிக்கு லேப்ராஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை செய்து அந்த பொருளை வெளியேற்ற முயற்சித்தனர்.
ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. இதையடுத்து அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இதில் அவரது வயிற்றில் அரை கிலோ முடியும், காலி ஷாம்பு பாக்கெட்டுகளும் எடுக்கப்பட்டன. விசாரணையில் அந்த சிறுமியின் நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டாராம்.
அதனால் மனவிரக்தியில் இருந்த அந்த சிறுமி இது போன்ற பொருட்களை உட்கொண்டது தெரியவந்தது. தற்போது அந்த சிறுமி முழுமையாக குணமடைந்துவிட்டார் என்றும் அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.