கோவையில் பைக்கில் இருந்த பையில் ரூ.26 லட்சம்.. மாட்டிக்கொண்டு விழித்த 2 பேர்.. ஹவாலா பணம் பறிமுதல்!
கோவை: கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்பட்ட ரூபாய் 26.40 லட்சம் ஹவாலா பணம் கோவையில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில் பணம் கடத்திய இருவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலை கோவை க.க.சாவடி அடுத்த எல்லை மாகாளியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள காவல்துறை சோதனைச்சாவடி பகுதியில் இன்று காலை மதுக்கரை நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட நிலையில் கோவையிலிருந்து கேரளாவிற்கு இருசக்கர வாகனம் மூலம் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்துள்ளது.

இதையடுத்து கேரளா நோக்கிச் சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் எந்தவித ஆவணங்களும் இன்றி 26 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கவரிங் வளையல்கள் ஆகியவை கொண்டு கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையத்து அவற்றை கொண்டு சென்றவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த அப்துல் ஹக்கீம் மற்றும் அப்துல் ரகுமான் என தெரியவந்தது. அவர்களிடம் அந்த ரொக்கப் பணம் குறித்து விசாரிக்கும்போது முன்னுக்கு பின் முரணாக அவர்கள் பதில் அளித்துள்ளனர்.
இருவரையும் க.க.சாவடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இது கணக்கில் வராத ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். விசாரணையில் கூடுதல் தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications