பொள்ளாச்சியில் இடிந்து விழுந்த வீடு.. மாமியார், மருமகன், மகள்.. அதிர்ஷ்டவசமாக தப்பிய ஐந்து பேர்
கோவை: வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக பெய்து வருகிறது. சென்னை உள்பட வடமாவட்டங்களில் மட்டுமின்றி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தொடர் மழை காரணமாக வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் தாயார், மருமகன், மகள், இரண்டு பேரக் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள காரணத்தால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ள, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

கடந்த 3 நாட்களில் கனமழை காரணமாக சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின. கொடைக்கானல், ஊட்டி, வால்பாறை, மேகமலை, மூணாறு போன்ற சுற்றுலா தலங்களுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். கோவை மாவட்டத்தை பொறுத்த வரை கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜூபிலி கிணறு வீதி சுப்பிரமணியம் சந்து பகுதியில் பூர்வீக வீட்டில் சித்ரா மற்றும் அவரது தாயார் லட்சுமி ஆகியோர் வசித்து வருகின்றனர். சித்ரா பொள்ளாச்சியில் உள்ள தனியார் துணிக்கடைக்கு பணிக்கு சென்று வருகிறார்.
சித்ராவின் மகள் சண்முகப்பிரியா, மருமகன் சிவக்குமார், பேரக்குழந்தைகள் கிருத்திகராஜ், தீக்சன் ஆகியோர் குடும்பத்துடன் உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர். பொள்ளாச்சி பகுதியில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சித்ராவின் பூர்வீக வீடு பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்த போதிலும், இரண்டு சிறு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தகவல் அறிந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீசார் குடும்பத்தாரை பத்திரமாக மீட்டனர்.
இந்த விபத்து குறித்து பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் ஷ்யாமளா மற்றும் நகராட்சி ஆணையாளர் குமரன், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். நகராட்சி சார்பில் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு வீட்டின் பக்கவாட்டு சுவரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஐந்து பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதனிடையே கனமழை காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு அருவி எனப்படும் கவி அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications