"நான் அரசு பள்ளியில் படித்தவன்".. ராகுல் பேச்சை தவறாக மொழிப்பெயர்த்தது ஏன்? செல்வபெருந்தகை சொன்னதை பாருங்க
கோவை: ராகுல் காந்தியின் ஆங்கில பேச்சை தவறாக மொழிப்பெயர்த்ததால் செல்வபெருந்தகை சர்ச்சையில் சிக்கினார். இதுபற்றி கேட்டதற்கு, ''எனக்கு தெரிந்த ஆங்கிலத்தை புரிந்து தான் நான் மொழிப்பெயர்த்தேன். நான் ஒன்னும் பிரிட்டிஷ் காரன் இல்லை. உங்களை போல் நான் மெத்த படித்தவன் கிடையாது. நாங்கள் எல்லாம் அரசு பள்ளியில் படித்தவன். நான் என்ன கான்வென்ட்லயா படித்தேன். சிபிஎஸ்இ-யிலா படித்தேன் எல்லாமே அரசு பள்ளி தான்'' என்று காட்டமாக கூறினார்.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக உள்ளன. இந்நிலையில் தான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை சென்னையில் இருந்து கோவைக்கு சென்றார். கோவை விமான நிலையத்தில் செல்வபெருந்தகை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''தேர்தல் கருத்துக் கணிப்புகளை பொறுத்தவரை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும் என ஆரம்பத்தில் இருந்து கூறி வருகிறேன். கருத்துக்கணிப்பில் 145 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என சொல்லப்படுவதையே கருத்து திணிப்பு என்கிறோம். நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளிவரும் அப்போது பேசுவோம்.
எங்கள் கூட்டணியில் அனைவரும் ஒரே கருத்தோடு தான் இருக்கிறோம், கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சி, காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தி, மல்லிகா அர்ஜுனா கார்கே ஆகியோரின் தேர்தல் பிரசாரம், முதலமைச்சரின் தேர்தல் பிரசாரம் என எங்களின் உழைப்பு வீண் போகாது. மக்கள் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என தெளிவாக உள்ளனர். அதனால் தான் 200 தொகுதிகளுக்கு மேல் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்கிறோம்,
பாஜக ஒவ்வொரு தேர்தல் முடிந்த பின்பும் இதுபோன்று கேஸ் விலை உயர்வு செய்கிறது. மக்கள் இதை புரிந்து கொண்டுள்ளனர், தமிழக மக்கள் இதை உணர்ந்து யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர்'' என்றார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை பற்றி ஜோதிமணி எம்பியின் விமர்சனம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு செல்வபெருந்தகை, '' மனக்குமுறல்களுக்கு பதில் கூற முடியாது.
கடந்த தேர்தலில் 25 தொகுதிகள் பெற்றிருந்தோம் இந்த முறை 28 தொகுதிகள் பெற்றுள்ளோம், கூடுதலாக ஒரு ராஜ்யசபா சீட்டு பெற்றுள்ளோம். இது அழிவு பாதையா..
நான் தலைமை பொறுப்புக்கு வருவதற்கு முன்பு 100% ஸ்ட்ரைக் ரேட் நாடாளுமன்றத்தில் இல்லை. இப்போது பாண்டிச்சேரி உட்பட 10க்கு 10 என 100% நாடாளுமன்றத்தில் உள்ளோம்.
வேட்பாளர் தேர்வை பொறுத்தவரை கட்சியில் பல குழுக்கள் உள்ளன அவை தான் தேர்வு செய்யும். வேட்பாளராக தேர்வு செய்யப்படவில்லை என பலருக்கும் வருத்தம் இருக்கும். இது திமுக அதிமுக உட்பட எல்லா கட்சியில் இருப்பது தான். அதையும் கடந்து தான் அனைவரும் கட்சிக்காக உழைத்துள்ளனர். அந்த வெற்றியை தேர்தல் முடிவுகளில் காண்போம்'' என்றார்.
அதன்பிறகு தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தியின் ஆங்கில பேச்சை தவறாக மொழிப்பெயர்த்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செல்வபெருந்தகை, ''எனக்கு தெரிந்த ஆங்கிலத்தை புரிந்து தான் நான் கூறினேன். நான் ஒன்னும் பிரிட்டிஷ் காரன் இல்லை. உங்களை போல் நான் மெத்த படித்தவன் கிடையாது. ரொம்ப தூரத்தில் இருந்தோம். ஸ்பீக்கர் எல்லாம் வேறு பக்கம் திருப்பி வைத்திருந்தார்கள்.
நாங்கள் எல்லாம் அரசு பள்ளியில் படித்தவன். ஓரளவு டிரான்லேட் பண்றோம்ல. இதை ஏன் பாராட்டாமல் விமர்சனம் செய்கிறீர்கள்? நான் என்ன கான்வென்ட்லயா படித்தேன். சிபிஎஸ்இ-யிலா படித்தேன். எல்லாமே அரசு பள்ளி தான். எங்களுக்கு தனியார் பள்ளி எல்லாம் தெரியாது. இதை விமர்சனம் செய்கிறார்கள் என்றால் அவர்களின் மனநிலை என்ன என்பதை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்'' என காட்டமாக கூறினார்.












Click it and Unblock the Notifications