ஃப்ளைட்ல வந்து இறங்கி ரோடு ஷோ நடத்துனா ஓட்டு போட்ருவாங்களா? போங்கப்பா.. அட்டாக் மோடில் எடப்பாடி!
கோவை: விமானத்தில் இருந்து இறங்கி வந்து ரோடு ஷோ நடத்தினால் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்களா? என எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடி, நட்டா ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பொள்ளாச்சி மக்களவை அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் அப்புசாமியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

எடப்பாடி ஆவேச பேச்சு: எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "அதிமுகவை உடைக்க மு.க.ஸ்டாலின் எத்தனையோ அவதாரத்தை எத்தனையோ ரூபத்தில் எடுத்துப் பார்த்தார். அத்தனையும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் துணையோடு தூள் தூளாக நொறுக்கி எறியப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தை உருவாக்கியவர் தெய்வ சக்தி படைத்த எம்ஜிஆர். அதை கட்டிக் காத்தவர் ஜெயலலிதா. இந்த இருபெரும் தலைவர்கள் இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு இறைவன் கொடுத்த கொடை.
அதிமுக இரண்டாகவும் போகவில்லை, மூன்றாகவும் போகவில்லை. ஒன்றாகத்தான் உள்ளது. எங்களுடைய தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்தார்கள். சில தலைவர்கள் வீட்டு மக்களுக்காக வாழ்ந்தார்கள். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இந்த கழகத்தை நம்மிடம் ஒப்படைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். நாம் அத்தனை பேரும் கூட்டுப் பொறுப்போடு தேர்தல் என்ற போரில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றிக் கொடியை நாட்டுவோம்.
தமிழ்நாடில் 30 ஆண்டுகாலம் ஆட்சி செய்த கட்சி அதிமுக. இன்றைக்கு எத்தனையோ தலைவர்கள் இங்கே வந்து பேசுகிறார்கள் அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று சொல்கிறார்கள். இன்று தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக வருவதற்கு காரணம் அதிமுக ஆட்சி தான். ஒரு ஆண்டு 2 ஆண்டு அல்ல.. 30 ஆண்டுகள் உழைத்த உழைப்பு. அதனால்தான் தமிழகம் அனைத்து துறைகளிலும் அகில இந்திய அளவில் உயர்ந்து நிற்கிறது.
புதுசா ஒருத்தரு வந்திருக்காரு: புதிதாக ஒரு தலைவர் வந்திருக்கிறார். அவர் யார் என்று உங்களுக்கு தெரியும். ஃபிளைட்டில் ஏறும் போது பேட்டி கொடுப்பார். இறங்கும் போது பேட்டி கொடுப்பார். பேட்டி கொடுப்பதுதான் அவரது வேலை. பேட்டி கொடுத்து மக்களை ஈர்க்கப் பார்க்கிறார். பல தலைவர்கள் எப்படி எப்படியோ மக்களை சந்தித்து ஈர்க்கப் பார்ப்பார்கள். ஆனால் இந்தத் தலைவர் டெக்னிக்காக அவ்வப்போது பேட்டி கொடுத்து மக்களை நம்ப வைத்து வாக்குகளை பெற முயற்சிக்கிறார். அது ஒன்றும் தமிழ்நாடு மக்களிடத்தில் எடுபடாது. இங்கு உழைக்கின்றவர்களுக்கு தான் மரியாதை.
ரோடு ஷோவாம்: மத்தியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்துவிட்டு செல்கிறார்கள். விமானத்தில் இருந்து வந்து இறங்கி ரோடு ஷோ நடத்தினால் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்களா? டெல்லியில் இருந்து அடிக்கடி தமிழ்நாடு வருகிறார்கள்; வந்து என்ன பயன்? எத்தனை தலைவர்கள் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது.
ஒரு திட்டத்தை கொடுத்து மக்கள் நன்மை பெற்றிருந்தால் ஒரு பிரயோஜனம் உண்டு. அதைவிட்டு நேராக வருகிறார்கள். ரோட்டில் செல்கிறார்கள். அதோடு கதை முடிந்து விட்டது. மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்களா? தமிழ்நாட்டு மக்கள் என்ன சாதாரண மக்களா? அறிவுத்திறன் படைத்தவர்கள். எது சரி? தவறு? என எடைபோட்டு தீர்ப்பு அளிக்கக்கூடியவர்கள். உங்கள் ஏமாற்று வேலை தமிழ்நாட்டில் எடுபடாது.
பாஜக மீது சரமாரி தாக்கு: காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு காலதாமதம் செய்தது. கூட்டணியில் இருந்தபோதே தமிழ்நாடு சார்ந்த பிரச்சனைகளை பாஜக அரசு தீர்க்கவில்லை. மக்களையும், விவசாயிகளையும் பாஜக ஏமாற்றுகிறது. நாங்கள் கூட்டணியில் இருந்தபோதே தீர்க்காத பிரச்சனைகளை தற்போது தீர்ப்பதாக பாஜக கூறுகிறது. மேகதாது விவகாரத்தில் மத்திய பாஜக அரசு தலையிட்டு முடிவுக்கு கொண்டு வரவில்லை.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி செய்தபோதும் மேகதாது அணை கட்டப்படும் என்றே சொன்னது. பாஜக ஆட்சியில் மேகதாது அணை கட்டப்படும் என்று சொன்னபோது இங்கிருக்கும் அண்ணாமலை எதுவும் சொல்லவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை யாரும் மீறக் கூடாது என்று பிரதமர் மோடி கூறினாரா? 2 மாநில முதல்வர்கள் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்னைகளை மத்திய அரசு எப்படி தீர்ப்பதாக வாக்குறுதி தரலாம். மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று பிரதமரோ, மத்திய நீர்வளத்துறை அமைச்சரோ சொல்வார்களா?" என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications