கோவை ஈஷா வளாகத்திற்கு அருகே மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர்.. காவல்துறை விளக்கம்
கோவை: தவெக ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சரியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது போல தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், போதை பொருள், அடிதடி சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இது மக்களிடம் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை ஈஷா யோகா மைய வளாகத்திற்கு வெளியே நேற்று இரவு ஒருவர் ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கோவை காவல்துறை விளக்கம் வெளியிட்டுள்ளது.
கோவை ஈஷா யோகா மையத்தில் கார்த்தின் என்கிற இளைஞர் நேற்று இரவு ரத்த காயங்களுடன் காணப்பட்டார். 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடலில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டார் என்று தகவல் வெளியானது. மறுபக்கம் அங்குள்ள சிசிடிவியில் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல் வெளியானது.

ஈஷாவில் இளைஞர் மர்ம மரணம்
இதுகுறித்து கோவை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "ஈஷா யோகா மையத்தில் சுற்றுலா பயணி கார்த்தி என்பவர் உயரமான இடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரேதப் பரிசோதனை முடிவுகள் மற்றும் சிசிடிவி ஆதாரங்கள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கையில், உயரத்தில் இருந்து குதித்ததால் அவர் உயிரிழந்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் எந்தவிதமான குற்றச் செயலோ அல்லது சந்தேகத்திற்கிடமான சூழலோ கண்டறியப்படவில்லை. உயிரிழந்தவர் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், சிறுவாடியைச் சேர்ந்த துளசி என்பவரின் மகன் கார்த்தி (29) என்பது தெரியவந்தது. கோவையில் ஹிதாச்சி (Hitachi) இயந்திர ஓட்டுனராக பணியாற்றி வந்த கார்த்திக், சுற்றுலாப் பயணியாக ஈஷா யோக மையத்திற்கு வந்த போது தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
பிரேதப் பரிசோதனை முடிவுகளில், உயிரிழந்தவருக்கு ஏற்பட்ட காயங்கள் உயரத்திலிருந்து கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயங்களுடன் ஒத்துப்போவதாக மருத்துவர்களின் முதல் கட்ட ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
பிரேதப் பரிசோதனைக்கு பிறகு கார்த்திக்கின் சடலம் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில் காவல்துறையின் அறிக்கை மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications