என்ஐஏ ரெய்டு.. PFIக்காக ஓரணியில் திரண்ட இஸ்லாமிய அமைப்புகள் - தமிழகம் தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு
கோவை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டு அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கும் சூழலில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஓரணியில் திரண்டு குரல் எழுப்ப தொடங்கி இருக்கின்றன.
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடு முழுவதும் கிளைகளை பரப்பி செயல்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய அரசு, பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறது.
அதே நேரம் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலவரங்களை தூண்டி வருவதாக குற்றம்சாட்டி அவற்றை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

என்.ஐ.ஏ. சோதனை
இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் அந்த அமைப்பின் அலுவலகங்கள் சோதனை செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முக்கிய தலைவர்கள் பலரை கைது செய்து இருக்கிறார்கள். இதனை அந்த அமைப்பினர் மட்டுமின்றி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், மதசார்பற்ற இயக்கங்களும் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பு
இந்த நிலையில் கோவையில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள், ஜமாத்துகளின் கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதிக், "சிறுபான்மை சமூகத்தை அச்சுறுத்தும் விதமாக மத்திய அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அனுமதியின்றி சோதனை
இந்த செயல்பாடுகளை கண்டிக்கின்றோம். என்.ஐ.ஏ. அமலாக்கத்துறை, சி.பி.ஐ ஆகியவை யாரெல்லாம் பாஜகவை எதிர்க்கிறார்களோ அவர்களை ஒடுக்க செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. என்.ஐ.ஏ., தீவிரவாத எதிர்ப்பு படையாக உருவாக்கப்பட்டது. ஆனால் இவர்கள் மாநிலத்தில் எந்த அனுமதியும் பெறாமல் சோதனை செய்கின்றனர். சிறுபான்மை அமைப்புகளை ஒடுக்குவதற்காக இந்த சோதனை நடைபெறுகிறது.

போராட்டம்
பாப்புலர் ஃப்ரெண்ட் ஆப் இந்தியா கொரோனா காலத்தில் பல்வேறு நல பணிகளை செய்துள்ளது. இன்று நடைபெற்ற சோதனையில் எந்த டாக்குமெண்ட்களும் கைப்பற்றப்படவில்லை. ஆனால் யு.ஏ.பி.ஏ., வழக்கு பதிவு செய்துள்ளனர். என்.ஐ.ஏ நடவடிக்கையை கண்டித்து தமிழக அளவில் போராட்டம் நடத்த உள்ளோம். கோவையில் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆப் இந்தியாவின் நிர்வாகி இஸ்மாயில் கைதை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விலைவாசி உயர்வு
அனைத்து துறைகளிலும் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது. அனைத்தும் விலைவாசி ஏற்றம் அடைந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. இதனை மறைப்பதற்காக இது போன்ற செயலில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது." என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications