திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. கோவை திரும்பிய ஜக்கி வாசுதேவ்.. உணர்ச்சி பொங்க வரவேற்ற ஆசிரமவாசிகள்!
கோவை: டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் மார்ச் 17-ம் தேதி நடைபெற்ற அவசர மூளை அறுவை சிகிச்சைக்கு பிறகு ஜக்கி வாசுதேவ் இன்று கோவை ஈஷா யோகா மையத்தை வந்தடைந்தார். அவருக்கு ஏராளமானோர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான ஜக்கி வாசுதேவுக்கு அண்மைக் காலமாக ஒற்றைத் தலைவலி இருந்ததாகவும் சில நாட்களுக்கு முன்பு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, அவரது மூளையில், ரத்தக் கசிவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில், ஜக்கி வாசுதேவ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஜக்கி வாசுதேவுக்கு கடந்த மார்ச் 17ஆம் தேதி மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, குணமடைந்து வந்தார். ஜக்கி வாசுதேவ் மருத்துவமனையில் இருக்கும் வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஜக்கி வாசுதேவ் உடல்நிலை தேறிய நிலையில், கடந்த மார்ச் 27ஆம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஜக்கி வாசுதேவ் இன்று டெல்லியில் இருந்து கோவை திரும்பியுள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த சத்குருவை வரவேற்பதற்காக ஏராளமான பொதுமக்களும், தன்னார்வலர்களும் விமான நிலையத்தில் திரண்டனர். மேலும், வழிநெடுகிலும், சாலை ஓரங்களிலும் மக்கள் ஒன்று கூடி பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து ஜக்கி வாசுதேவை வரவேற்றனர்.
ஈஷா யோகா மையத்தில் தங்கி இருக்கும் ஆசிரமவாசிகளும், தன்னார்வலர்களும் தங்கள் குரு ஜக்கி வாசுதேவை மீண்டும் நலமுடன் பார்த்ததில் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்தனர். பலரும் ஜக்கியை பார்த்து "சம்போ சத்குரு.." என கோஷமிட்டு, உணர்ச்சிப் பெருக்கில் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். மேலும், அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
கோவைக்கு விமானத்தில் வந்த ஜக்கி வாசுதேவ் அங்கிருந்து வெள்ளியங்கிரி அருகே அமைந்துள்ள ஈஷா யோகா மையத்திற்குச் சென்றார். பழங்குடி மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஈஷா யோகா மையத்தின் நுழைவு வாயிலான மலைவாசலில் ஒன்று கூடி அவர்களின் பாரம்பரிய முறையில் ஜக்கி வாசுதேவுக்கு வரவேற்பு அளித்தனர். மேலும், ஜக்கி வாசுதேவ் உடல்நிலை தேறி வந்துள்ளதையொட்டி, ஒட்டுமொத்த ஈஷா யோக மையமும் வண்ணமயமான அலங்காரங்களுடன் விழாக்கோலம் பூண்டது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தாணிக்கண்டி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி இன பெண்மணி விஜயா கூறுகையில், 'எங்களுடைய கிராம மக்கள் ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு சத்குரு தான் காரணம். அவரால் தான் எங்களுடைய பொருளாதாரமும் உயர்ந்துள்ளது. அவர் கற்றுக்கொடுத்த யோகா மூலம் பல இளைஞர்கள் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட செய்தியை அறிந்ததும் நான் மிகவும் கவலைப்பட்டேன். அந்த ஆபத்தில் இருந்து சத்குரு மீண்டு வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் கூடிய விரைவில் முழு நலன் பெற வேண்டும் என்பது என்னுடைய ஆசை' எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications